வடகலை தென்கலை பிரச்சனையை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதே சமயத்தில் அவர்களுடைய மத உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு வடகலை பிரிவினர் வேதபாராயணம் செய்வதற்கு அனுமதி மறுத்து அறநிலையத்துறை உதவி ஆணையர் மே 14ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் தடைவிதிக்கக்கோரியும் நாராயணன் என்பவர் அவசர வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் வடகலை தென்கலை பிரிவினருக்கிடையேயான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு பிரிவினருக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது சட்டவிரோதம் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக்சுந்தரம் ஆஜராகி, இந்த விவகாரத்தில் தினசரி பிரச்சினை ஏற்படுவதாலும், சாதாரண பக்தர்கள் முறையாக தரிசிக்க முடியாததாலும், அதை ஒழுங்குபடுத்துவதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது நீதிபதி, ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது  என்றாலும், அவர்களது மத உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கூறி, அறநிலையத்துறை உத்தரவு பிறப்பிக்கும் முன்பு உள்ள நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைத்துள்ளார்.