தேர்தலில் மனைவியை போட்டியிட வைக்க முயன்ற திமுக வட்டச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை மடிப்பாக்கம் 188 வது திமுக வட்ட செயலாளரான 38 வயதான செல்வம், அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். 
அத்துடன், 38 வயதான செல்வம், மடிப்பாக்கம் பகுதியின் திமுக வட்டச் செயலாளராகவும் இருந்து வந்தார். இவர், தற்போது நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் 188 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முழு வீச்சில் செயல்பட்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், இவர் நேற்றிரவு ராஜாஜி நகர் பிரதான சாலையில் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், இவர்கள் வந்த காரை வழி மறித்து நின்று உள்ளார்.

தொடர்ந்து, கண் இமைக்கும் நேரத்தில் திமுக வட்டச் செயலாளரான செல்வத்தை வெட்டி உள்ளனர். இதில், படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.

இதனையடுத்து, செல்வத்தை வெட்டிய அந்த 6 பேர் கொண்ட கும்பல், தாங்கள் வந்த இரு சக்கர வாகனங்களில் உடனடியாக தப்பிச் சென்று உள்ளனர். 

அப்போது, அந்த வழியாக வந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வதை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் செல்வத்தை பரிசோதித்த மருத்துவர்கள், “இவர், வரும் வழியிலேயே ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக” கூறி உள்ளனர். 

மேலும், இது குறித்து தகவல் அறிந்த மடிப்பாக்கம் காவல் துறையினர், செல்வத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், செல்வம் கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், செல்வம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக அந்த பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க மடிப்பாக்கம் பகுதியில் ஏராளமான போலீசாரை குவித்து உள்ளனர். இதனால், மடிப்பாக்கம் பகுதியில் முன்பை விட தற்போது பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அதாவது, “சென்னையில் உள்ள 188 வது வார்டு திமுக வட்டச் செயலாளரான செல்வம், வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவியை போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகளை மிக தீவிரமாக செய்து வந்தார்.

இந்த நிலையில் தான், அவர் மர்ம நபர்களால் அதிரடியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்” என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில், “ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம்” என்கிற ரீதியிலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுகவைச் சேர்ந்த வட்ட செயலாளர் ஒருவரே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.