மத்திய பட்ஜெட் மக்களின் நலனை மறந்துவிட்டது என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

budget

2022-23-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. அப்போது, பல்வேறு துறைகளில் மத்திய அரசு புரிந்த சாதனைகளை அவர் பட்டியலிட்டு பாராட்டினார். அவரைத் தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவையில் மத்திய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம், 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, வருமான வரி உச்ச வரம்பு, நெடுஞ்சாலை திட்டம், 400 வந்தே பாரத் ரெயில் போன்றவை இடம்பெற்றிருந்தன. இந்த பட்ஜெட் உரையில்,வருமான வரி வரம்பு உயர்வு,வீட்டு லோன் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்தில் வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த மத்திய பா.ஜ.க. அரசின் வழக்கமான பட்ஜெட்டாகவே இந்த 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும் அமைந்திருக்கிறது. தனிநபர் வருமானவரி விகிதத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை. மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப்போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் இல்லை. தமிழ்நாடு அரசின் சார்பில் மத்திய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு நிதியுதவி இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டுக்கான புதிய ரெயில் திட்டங்களும் இல்லை. மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு கோரிய நிவாரண நிதி ஒதுக்கீடும் இல்லை என ஒரு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருப்பது தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மேலும் கோதாவரிபெண்ணாறு-காவிரி நதிநீர் திட்டத்தின் விரிவான அறிக்கை மட்டுமே தயார் என்ற அறிவிப்பு இருப்பது ஆறுதல் அளித்தாலும் அறிவிப்பினை செயல்படுத்த முதல்கட்ட நிதி ஒதுக்கீட்டினைக்கூட பட்ஜெட்டில் காணமுடியவில்லை என்பது கவலையளிக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட ராணுவ பெருவழித்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால் இந்த துறையிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தினை பேரூராட்சி பகுதிகளுக்கும் நீட்டிக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீட்டினை ரூ.25 ஆயிரம் கோடி அளவிற்கு குறைத்திருப்பது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த திட்டத்தை முடக்குவதற்கான முயற்சியாக மட்டும் தெரியவில்லை. அடித்தட்டு மக்களின் கையில் ஒரு பைசா கூட இருக்கக்கூடாது என்ற எண்ண ஓட்டத்தையே வெளிப்படுத்துகிறது.

கூட்டுறவு கூட்டாட்சியின் அடிப்படையில் மாநில மூலதன முதலீடுகளுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு எனக்கூறி மாநிலங்களுக்கு நிதி அளிக்கப்போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும் இந்த நிதி ஒதுக்கீடு முக்கியமாக பிரதமரின் கதிசக்தி திட்டத்துக்கே பயன்படுத்தப்படும் என்பது மாநிலத்தின் பெயரை சொல்லி நிதி ஒதுக்கி மத்திய அரசே தனது திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும் விதமான நிதி ஒதுக்கீடாகவே காட்சியளிக்கிறது. இந்த ரூ.1 லட்சம் கோடியும் மாநிலங்களுக்கு நிபந்தனைகளின்றி பகிர்ந்து அளிக்கப்படும் விதத்தில் பட்ஜெட் அறிவிப்பு அமைந்திருந்தால் நானே முதலில் வரவேற்று இருப்பேன். ஆனால் அந்த நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பல்வேறு நிபந்தனைகளை உருவாக்கி இந்த நிதி உரிய வகையில் மாநில அரசுகளுக்கு கிடைக்காதவாறு செய்திருப்பது மாநில அரசுகளுக்கு எந்த வகையில் உதவும்?

பருவநிலை மாற்றத்தைப்பற்றி பிரதமரே பன்னாட்டு கருத்தரங்குகளில் வாக்குறுதி அளித்துவிட்டு அந்த திட்டங்களை செயல்படுத்த முன்வரும் மாநிலங்களுக்கு இதற்காக எவ்வித புதிய அறிவிப்புகளோ, போதிய நிதி ஒதுக்கீடோ இல்லாத பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. அதேபோல் ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு என்று மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் திட்டத்தை நிதி மந்திரி அறிவித்திருப்பது எந்த அறிவிப்பினை செய்தாலும் மாநில உரிமைகளை எப்படி பறிப்பது என்பதை மட்டுமே மத்திய அரசு கவனத்தில்கொண்டு செயல்படுவதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் ஏற்பட்ட வாழ்வாதார, பொருளாதார இழப்பில் இருந்து மக்களை மீட்கும் நலத்திட்டங்கள், நேரடி பண உதவி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் திட்டங்கள், ஆக்கபூர்வமான மானியங்கள் போன்ற எதுவும் இல்லை. மாநில அரசுகளின் நிதி பற்றாக்குறை நிலைமையை எதிர்கொள்ள மத்திய அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பதோடு 2022-23-ம் ஆண்டுக்கு மாநில அரசுகளுக்கு மொத்த நிதி பற்றாக்குறை வரம்பு 4 சதவீதம் என சென்ற ஆண்டை காட்டிலும் குறைக்கப்பட்டுள்ளது. இதில், மின் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டால் மட்டுமே 0.5 சதவீதம் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் தமிழ்நாடு போன்ற மாநிலத்துக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இக்கட்டான இந்த நிதிச்சூழலில் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் குறைந்தபட்சம் 5 சதவீதம் நிதிப்பற்றாக்குறை வரம்பை மாநில அரசுகளுக்கு அனுமதித்திருக்க வேண்டும்.

மேலும் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத்தொகை 30.6.2022 உடன் நிறைவடையும் சூழலில் இந்த தொகை வழங்குவதை தொடரவேண்டும் என்ற மாநில அரசுகளின் கோரிக்கையை புறக்கணித்திருப்பது மத்திய-மாநில அரசுகளின் நல்லுறவிற்கு கைகொடுக்க மறுக்கும் மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பான்மையையே காட்டுகிறது என தெரிவித்தார்.

சுருங்கச்சொன்னால், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் திட்டங்களை அளிக்க மறந்து குறிப்பாக 5 மாநில தேர்தல் நடைபெறும் சூழலில் தங்களுக்கு ஏதாவது நல்ல அறிவிப்பு கிடைக்காதா? என ஏங்கித்தவித்த மக்களின் எதிர்பார்ப்பை புறக்கணித்து மக்களை பற்றி சிந்திக்காத இந்த பட்ஜெட்டை மக்களின் நலனை மறந்த பட்ஜெட் என்று அடைமொழியிட்டு அழைப்பதே முற்றிலும் பொருத்தமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.