தமிழ் திரை உலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக மலையாளம் மற்றும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும் மலையாளத்தில் அணியத்தி ப்ராவு படத்தின் மூலம் கதாநாயகியானார். தமிழிலும் காதலுக்கு மரியாதை என இப்படம் ரீமேக் செய்யப்பட தளபதி விஜய்யுடன் இணைந்து தமிழிலும் ஷாலினி நடித்திருந்தார்.

தொடர்ந்து விஜய்யுடன் கண்ணுக்குள் நிலவு, இயக்குனர் மணிரத்தினத்தின் அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். முன்னதாக இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த அமர்க்களம் திரைப்படத்தில் இணைந்து நடித்த போது ஷாலினி மற்றும் அஜித் குமார் இடையில் காதல் மலர்ந்தது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் முற்றிலுமாக நடிப்பிலிருந்து ஷாலினி விலகி இருக்கிறார். அடுத்ததாக அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வலிமை படம் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நடிகை ஷாலினியின் பெயரில் நேற்று (பிப்ரவரி 1-ம் தேதி)  ட்விட்டரில் புதிய கணக்கு Mrs Shalini Ajithkumar என்ற பெயரில் தொடங்கப்பட்டது. எனவே ஷாலினி அஜித்குமார் ட்விட்டரில் இணைந்ததாக வதந்திகள் பரவின. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் அஜித்குமாரின் மேலாளர் திரு.சுரேஷ் சந்திரா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,

 “ #MrsShaliniAjithkumar என்ற பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. ஷாலினி ட்விட்டரில் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். தயவுசெய்து இதை தவிர்த்து விடுங்கள்” 

என தெரிவித்துள்ளார்.