20 மாதங்களுக்கு பிறகு சென்னை-சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவை நேற்று முதல் தொடங்கியது.

air india

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக பன்னாட்டு பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டது. மத்திய அரசின் அனுமதியின் பேரில் சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவை பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து நேரடியாக பயணிகள் விமான சேவை தொடங்கப்படவில்லை. இதனால் இந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே புலம் பெயர்ந்த தமிழர்கள் வந்து செல்ல மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு நேரடி விமான சேவை ஏற்படுத்தி தரவேண்டும் என்று மத்திய மந்திரிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 25-ம் தேதி கடிதம் எழுதினார்.

மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியதாவது: சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ள தமிழர்கள் மற்றும் எங்கள் மாநிலத்தில் இருந்து சென்ற பிற விமானப் பயணிகள், கொரோனா பரவல் கால கட்டத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தனர். தற்போது அவர்கள் திரும்பிச் செல்வதற்கான நேரடி விமான சேவை இல்லாததால் அவர்கள் பெரிய தவிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர். அந்நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விரும்பும்நேர்வுகளிலும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். எனவே விரைவில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுடன் தற்காலிக கொரோனா கால போக்குவரத்து ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, தற்காலிக விமான போக்குவரத்து சேவைகளை வழங்கி, அந்த நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து இந்தக் கோரிக்கை தற்போது பரிசீலனை செய்யப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. இதையடுத்து 20 மாதங்களுக்கு பிறகு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து சென்னை -சிங்கப்பூர், டெல்லி- சிங்கப்பூர் மற்றும் மும்பை-சிங்கப்பூர் ஆகிய விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், தினமும் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 6 விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் அதன்படி சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க  சிங்கப்பூர் செல்லும் பயணிகள் 2 தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். 48 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து ‘தொற்று இல்லை’ என்ற சான்றுடன் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டதால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல இணைப்பு விமானமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.