தெற்கு அந்தமான் அருகே அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

குமரி கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இதனிடையே தமிழகத்தில் டிசம்பர் 3-ம் தேதி வரையில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், தெற்கு அந்தமான் அருகே அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவான பின்னர் 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்கிடையில், இன்று கன்னியாக்குமரி, நெல்லை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அரபிக்கடலில் உருவாகவுள்ள மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மகாராஷ்டிரா,குஜராத் ஆகிய மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தென்கிழக்கு, மத்திய வங்ககடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக் கூடும். எனவே 30-ம்  தேதி முதல் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் வானிலை அறிக்கையை தெரிந்துகொள்ள கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்