குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன் அதனை படம்பிடித்த சுற்றுலாப் பயணிகளிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி மலைப்பகுதியில் விமானப்படையின் ராணுவ ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில்  முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் தப்பினார். தற்போது அவருக்கு பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 13 பேரின் உயிரைப் பறித்த இந்த விபத்து பற்றி வெலிங்டன் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விபத்து பற்றி விசாரிக்க நீலகிரி ஏ.டி.எஸ்.பி. முத்துமாணிக்கத்தை விசாரணை அதிகாரியாக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. அவர் இதுவரை 26 சாட்சிகளை விசாரித்துள்ளார். இதையடுத்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தும், விசாரணை அதிகாரி முத்துமாணிக்கமும் காட்டேரி வனப்பகுதிக்கு நேரில் சென்றனர். 

choppercrash

அங்கு ட்ரோன்களைப் பறக்கவிட்டு அவற்றின் மூலம் காட்டுப்பகுதியில் ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கிறதா என தேடி வருகின்றனர். காட்டேரிப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து நேரிடுவதற்கான புற சாத்தியக்கூறுகள் குறித்து 'MAPING' செய்து ஆராய்ந்து வருகின்றனர். 

விசாரணையில் பங்கேற்க நீலகிரி, கோவை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்களும் காட்டேரிக்கு வந்திருக்கின்றனர். ஹெலிகாப்டர் விழுந்த இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சுற்றளவை கணக்கிட்டு, விபத்து நேரிடும் வகையில் அந்தப் பகுதியில் என்னென்ன உள்ளன என்று ஆய்வு செய்வதே 'MAPPING'ஆகும்.

இதற்கிடையில் விபத்துக்கு முன்னதாக ராணுவ ஹெலிகாப்டர் வானத்தில் பறப்பதையும், பனிமூட்டத்திற்குள் சென்று மறைவதையும், சிறிது நேரத்தில் கீழே விழும் சத்தம் கேட்பதையும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் செல்ஃபோனில் வீடியோவாக எடுத்து இருந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்திற்கு சில நொடிகளுக்கு முன்னர் சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ வைரலாகியது. இந்த வீடியோவில் முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் பனி மூட்டத்தால் மலைப்பகுதியில் தாழ்வாக செல்வது இடம்பெற்றது. 

தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் வெடித்து சிதறும் சத்தம் கேட்க, அந்த வீடியோவில் இருக்கும் நபர்கள் “என்னாச்சு உடைஞ்சுருச்சா” என அதிர்ச்சியுடன் கேட்கும் காட்சிகளும் பதிவாகியது. இந்நிலையில்தான் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

தொடர்ந்து இந்த வீடியோவை எடுத்த சுற்றுலாப் பயணிகள் யார் என்பது குறித்தும், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய தற்போது தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த வீடியோ எடுத்த சுற்றுலாப் பயணிகளிடமும் விசாரணை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.