அரசுப் பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஏற்கெனவே நடத்துநர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பேருந்து ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் கோனூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான மாணவி, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்த மாணவி, நேற்று மாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வந்த நிலையில், சொந்த ஊர் செல்வதற்காக விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி உள்ளார். 

அப்போது, அந்த அரசுப் பேருந்து பெரும்பாக்கம் என்னும் இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிவிட்டனர். அப்போது, இந்த கல்லூரி மாணவி மட்டும் தனியாக அதில் பயணம் செய்துக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, மிகச் சரியாக இரவு 7.15 மணி அளவில், அந்த அரசுப் பேருந்தில் அந்த கல்லூரி மாணவி தனியாக இருப்பதை கவனித்த அந்த பேருந்தின் ஓட்டுநர் சிலம்பரசன், மாணவியின் அருகில் வந்து அமர்ந்து அவரிடம் அத்து மீறி நடந்துகொண்டதுடன், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, உடனடியாக தன்னுடைய கணவருக்கு போனில் அழைத்து, பேருந்தில் நடக்கும் வாக்குவாதத்தை தனது கணவர் கேட்கும் படி செய்திருக்கிறார்.

அதே நேரத்தில், அந்த மாணவி இறங்க வேண்டிய கோனூர் கிராமத்தில் பேருந்தை நிறுத்தாமல், அந்த பேருந்தின் ஓட்டுநர் தொடர்ந்து அந்த பேருந்தை இயக்கி உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, பேருந்தில் இருந்து கீழே குதித்து உள்ளார். 

இது குறித்து, அந்த மாணவியின் கணவன் ஊர் மக்களிடம் தகவல் தெரிவித்த நிலையில் இந்த தகவல் அறிந்து வந்த கோனூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பேருந்தை மடக்கிப்பிடித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு தர்ம அடி கொடுத்து அவர்கள் இருவயுரை காணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, அரசுப் பேருந்தின் கண்டக்டர் சிலம்பரசன், டிரைவர் அன்புச்செல்வன் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

குறிப்பாக, பேருந்தின் கண்டக்டர் சிலம்பரசனை போலீசார் உடனடியாக கைது செய்தனர். 

இந்த நிலையில், பேருந்தின் டிரைவரையும் கைது செய்ய வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்தியதால், தற்போது அந்த பேருந்தின் டிரைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் ஓடும் பேருந்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.