கொரோனா அச்சுறுத்தலால் இந்திய அளவில் ஒட்டுமொத்தத் திரையுலகிற்குமே கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுகட்ட பல்வேறு நடிகர்கள் உதவி செய்து வருகிறார்கள். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் படப்பிடிப்புகள், இறுதிக்கட்டப் பணிகள், திரையரங்குகள் திறப்புக்கு அனுமதி கிடைத்து திரைத்துறை மெதுவாக மீண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ஒரு முன்னெடுப்பாக, நவரசா என்ற ஆந்தாலஜி எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை இயக்குனர்கள் மணிரத்னம், ஜெயேந்திரா இருவரும் தயாரிக்கின்றனர். ஜஸ்ட் டிக்கெட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் ஏபி இண்டர்நேஷனல், ஆங்கிள் க்ரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வாகத் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றன.

இந்தத் திரைப்படத்தில் பங்காற்றும் அத்தனை கலைஞர்களும், நிறுவனங்களும், திரைத்துறைக்கு ஆதரவு தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், இலவசமாகப் பணியாற்றியுள்ளனர். காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம், சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குனர்கள் இயக்கிவருகின்றனர். 

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த ஆந்தாலஜியை கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குனர்கள் இயக்கவுள்ளனர்.

சமீபத்தில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், தான் பணியாற்றும் கௌதம் மேனனின் குறும்படம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கௌதம் மேனனுக்காக படம்பிடித்துக் கொண்டிருக்கிறேன். சூர்யா நடிக்கும் இணையத்துக்கான படம் இது. படப்பிடிப்பு தளத்தில் அதிக உற்சாகம் நிறைந்துள்ளது என்று பி.சி. குறிப்பிட்டிருந்தார். தற்போது சூர்யா நடிக்கும் பகுதியை கெளதம் மேனன் முடித்துவிட்டதாக தகவல் தெரியவந்தது. சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு கிடைத்த சிறந்த வரவேற்பில் உற்சாகமாக இருக்கும் சூர்யாவின் ரசிகர்கள், பி.சி.ஸ்ரீராமின் இந்த ட்வீட்டாலும் மேலும் உற்சாகமடைந்துள்ளனர். இந்த ஆந்தாலஜியில் ஏற்கெனவே ரதிந்தீரன் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோர் தங்களுடைய படப்பிடிப்பை முடித்துவிட்டனர். மற்ற குறும்பட வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் சூர்யா 40 திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கவுள்ளார். இரண்டாவது முறையாக இயக்குனர் பாண்டிராஜுடன் இணைகிறார் சூர்யா.