விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று இதன் அறிவிப்பு வெளியானது. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே திட்டமிட்டபடி படப்பிடிப்பை துவங்க முடியாமல் போனது. 

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. செவன் ஸ்க்ரீன் நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் சென்னையில் நடந்த பூஜையில் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்வேதா சாபு சிரில் கலை இயக்கம் செய்கிறார். ஹைதராபாத்தில் நடந்த இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. 

இந்நிலையில் படத்தின் தற்போதைய நிலை குறித்தும், புதிய அப்டேட் பற்றியும் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு அறிவிப்பு வரவிருப்பதாக கூறியுள்ளார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

படத்தில் நடிகர் ஷீகான் ஹூசைனி இணைந்துள்ளார் என்ற தகவல் கடைசியாக தெரியவந்தது. முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியும், நயன்தாராவும் சேர்ந்து நடித்த நானும் ரௌடி தான் படம் ஹிட்டானது. அதனால் இந்த வெற்றிக் கூட்டணியில் உருவாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. 

இயக்கத்தில் அசத்தும் விக்னேஷ் சிவன் தயாரிப்பு பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கூழாங்கல் மற்றும் ராக்கி போன்ற சிறந்த படங்களை கைப்பற்றி ரிலீஸ் செய்யவுள்ளார்.