மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் கர்ணன். லால், ராஜிஷா விஜயன், லக்ஷ்மி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் மற்றும் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் கடந்த மார்ச் 31-ம் தேதி நடைபெற்றது. ஹாலிவுட் படத்துக்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால் தனுஷ் கலந்து கொள்ளவில்லை. அவரைத் தவிர்த்து இதர அனைத்துப் படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள். வெளிநாட்டில் இருந்து தனுஷ் அனுப்பிய கடிதம் பத்திரிகையாளர் சந்திப்பில் வாசித்துக் காட்டப்பட்டது. 

தற்போது ரிலீஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கர்ணன் டீஸர் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. சந்தோஷ் நாராயணன் இசையில் கர்ணன் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக இதில் பண்டாரத்தி புராணம் என்ற பெயரில் பாடலொன்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுப்படுத்துவதாகக் கூறி, இதனைப் படத்திலிருந்தும், இணையத்திலிருந்தும் நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார் மாரி செல்வராஜ்.

படத்தின் நான்காம் பாடல் கர்ணனின் யுத்தமான உட்றாதீங்க எப்போவ் பாடல் வீடியோ வெளியானது. தீ பாடிய இந்த பாடல் வரிகளை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். 

இந்நிலையில் கர்ணன் படத்தின் கேரள திரையரங்க உரிமையை ஆஷிர்வாத் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் மோகன் லால் இந்த படத்தை வெளியிடுகின்றனர். 

தனுஷ் தற்போது தி கிரே மேன் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஹாலிவுட் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து தனுஷ் படம் தொடர்பான அப்டேட்டுகள் மற்றும் தனுஷ் தேசிய விருது வாங்கிய செய்தி என ருசிகர செய்திகள் வெளியாகி வருகின்றன.