சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் அடியெடுத்து வைத்து இன்று ரசிகர்கள் விரும்பும் நாயகியாக திகழ்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எதார்த்தமான ரோல், கிராமத்து பெண் வேடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

கொரோனா காரணமாக இந்த ஆண்டு படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் இருந்தாலும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கா.பெ. ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. விருமாண்டி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக அரிய நாச்சி எனும் பாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஐஸ்வர்யா. 

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த குறும்படம் வெளியாகி சினிமா பிரியர்களை கவர்ந்து வருகிறது. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த லாக்டவுனில் இந்த குறும்படத்தை நடித்து முடித்துள்ளார். ஷாரதா ராமநாதன் இயக்கத்தில் உருவான ஐந்து நிமிட குறும்படமாகும். சந்தோஷ் நாராயணன் இந்த குறும்படத்திற்கு இசையமைத்துள்ளார், ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகள் செய்துள்ளார். 

இந்த குறும்படத்தில் நடிகர் அஸ்வின் காக்குமனு முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த லாக்டவுனில் சுந்தர்.சி தயாரிப்பில் அஸ்வின் நடித்த நாங்க ரொம்ப பிஸி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் முதல் முறையாக ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ஜோடி சேர்ந்திருப்பது ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது. மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கிறார் அஸ்வின். 

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் பூமிகா படத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா. இயக்குனர் ரத்தின்திரன் ஆர். பிரசாத் இயக்கி வருகிறார். இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படமாகும். ஹாரர் திரில்லரான இப்படத்திற்கு ராபர்ட்டோ ஒளிப்பதிவு செய்கிறார். பிரித்வி சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆனந்த் ஜெரால்டின் எடிட்டிங் செய்கிறார். டான் அசோக் ஸ்டண்ட் பணிகள் மேற்கொள்கிறார்.