சாதாரண மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்தான் உள்ளது என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

budget2022

2022-23-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, பல்வேறு துறைகளில் மத்திய அரசு புரிந்த சாதனைகளை அவர் பட்டியலிட்டு பாராட்டினார். அவரைத் தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவையில் மத்திய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

அதனைத்தொடர்ந்து 2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம், 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, வருமான வரி உச்ச வரம்பு, நெடுஞ்சாலை திட்டம், 400 வந்தே பாரத் ரெயில் போன்றவை இடம்பெற்றிருந்தன. இந்த பட்ஜெட் உரையில்,வருமான வரி வரம்பு உயர்வு,வீட்டு லோன் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு பூஜ்யம்தான் உள்ளது என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்படும் வேளையில் சாதாரண பொது மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்தான் உள்ளது. எதையுமே குறிக்காத பெரிய வார்த்தைகளில் அரசாங்கம் தோற்றுவிட்டது, இது பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்” என்று ட்விட்டரில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.