வள்ளுவரின் 'கற்க கசடற' எனும் குறளுக்கு இணங்க கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என கூறி நாடாளுமன்றத்தில் திருக்குறளை மேற்கோள்காட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

இந்திய நாடாளுமன்றம் பொதுவாக ஆண்டுக்கு 3 முறை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என 3 முறை நடைபெறும் இந்த கூட்டங்களில் நல்லாட்சியை உறுதி செய்வதற்கான சட்டமியற்றல், நாட்டுக்கான வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் என பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இதில் ஆண்டின் முதல் கூட்டமான பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்நிலையில்  இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகியது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலையில் தொடங்கும் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். முன்னதாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சம்பிரதாய முறைப்படி புறப்பட்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை அணிவகுப்பு நாடாளுமன்றம் அழைத்துவரப்பட்டார். ஜனாதிபதி தனது உரையை தொடங்கும் முன் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட் மசோதாவை தமிழக கவர்னர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காமல் தாமதம் செய்வதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஜனாதிபதி  உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: ஜி.எஸ்.டி வரி வசூல் கடந்த ஒரு சில மாதங்களில் ரூபாய் ஒரு லட்சம் கோடியை தாண்டி உள்ளது. ஏற்றுமதியில் நமது நாடு தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.
நாட்டின் முன்னேற்றத்திற்காகவே புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. மேலும் வள்ளுவரின் 'கற்க கசடற' எனும் குறளுக்கு இணங்க கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என கூறி நாடாளுமன்றத்தில் திருக்குறளை மேற்கோள்காட்டி ஜனாதிபதி உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட சுய உதவி குழுக்கள் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு போதுமான பயிற்சிகளை வழங்கி உள்ளது; இந்த குழுவின் முக்கியமான நோக்கம் பெண்களை மையப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாரம்பரியமான மழைநீர் சேகரிப்பு முறைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் அவர்களது அருகில் உள்ள பகுதிகளிலேயே தங்களது விளை பொருட்களை விற்பனை செய்யும் வகையிலான ஏற்பாடுகளை அரசு  மேற்கொண்டுள்ளது, இயற்கை உணவு பொருட்களை உற்பத்தி செய்யவும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும் 2016 முதல், 56 வெவ்வேறு துறைகளில் 60,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன, இதன் மூலம் 6 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளூர் மொழிகள் ஊக்குவிக்கப்படுகின்றன; முக்கியமான நுழைவுத் தேர்வுகளை இந்திய மொழிகளில் நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 10 மாநிலங்களில் உள்ள 19 பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 6 இந்திய மொழிகளில் கற்பிக்கப்படும்.

பிரதமர் கிஷான் மூலம் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் குடும்பங்கள் 1.80 லட்சம் கோடி ரூபாய் பெற்றுள்ளனர். விவசாயத் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது.நாட்டின் வளர்ச்சியில் நமது சிறு-குறு விவசாயிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது; எனது அரசு எப்போதும் 80% சிறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் ஒரு பகுதியாக, 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் குடும்பங்கள் பயனடைந்துள்ளன என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.