தமிழ் திரை உலகில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, இது என்ன மாயம், வாகா, அசுரகுரு, புலிக்குட்டி பாண்டி என பல படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளார். 2 பாகங்களாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்த ஆண்டு(2022) கோடை வெளியீடாக பொன்னியின் செல்வன் பாகம்-1 திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

மேலும் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் டாணாக்காரன் மற்றும் இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்கத்தில் பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய படங்களும் விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே அடுத்து விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

பிரபல இயக்குனர் முத்தையாவின் உதவி இயக்குனரான கார்த்தி இயக்கும் இந்த புதிய படத்திற்கு டைகர் என் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் முத்தையா திரைக்கதை & வசனம் எழுதியுள்ள டைகர் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க பிக்பாஸ் போட்டியாளர்களும் நடிகர்களும் டேனியல் மற்றும் சக்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஓபன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் டைகர் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்நிலையில் இன்று (பிப்ரவரி 1ஆம் தேதி) விக்ரம் பிரபுவின் டைகர் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.