சூட்கேசுக்குள் மறைத்து காதலியை கல்லூரி விடுதி அறைக்கு கொண்டு சென்ற மாணவர் கையும் களவுமாக சிக்கிய வீடியோ வைரலாகி உள்ளது.

student love

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மணிப்பால் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரி விடுதியில் தங்கி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவர் ஒருவர் வெளியே சென்றார். பின்னர் நீண்ட நேரம் கழித்து அந்த மாணவர் டிராலி பெட்டியுடன் விடுதிக்குள் நுழைந்தார். இதை பார்த்த கல்லூரி விடுதி காவலாளிக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர், மாணவரிடம் டிராலி பெட்டியை சோதனை நடத்த தரும்படி கேட்டுள்ளார். 

ஆனால் அதற்கு மாணவர் மறுத்து விடுதிக்குள் செல்ல முயன்றார். ஆனாலும் காலாளி விடாப்பிடியாக மாணவரை தடுத்து நிறுத்தி பெட்டியை வாங்கி திறந்து பார்த்தார். அப்போது அதிர்ச்சி காத்திருந்தது.

 அதாவது டிராலி பெட்டியில் இருந்து இளம்பெண் ஒருவர் வெளியே வந்தார். இதை பார்த்து விடுதி காவலாளி, விஷயம் தெரிந்து வந்து பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாணவனிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், தனது காதலி என்று தெரிவித்தார். ஆனாலும் பெட்டிக்குள் பெண்ணை மறைத்து வைத்து எடுத்து வந்ததால் கொலை முயற்சியாக இருக்கும் என்று கருதிய விடுதி காவலாளி, மணிப்பால் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் பேரில் போலீசார் விடுதிக்கு விரைந்து வந்தனர்.

அதனைத்தொடர்ந்து போலீசார், மாணவர் இளம்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மாணவர், போலீசாரிடம் ‘அந்த பெண் தனது காதலி. நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம். காதலியை கல்லூரி விடுதிக்குள் அழைத்து செல்ல ஆசைப்பட்டேன். ஆனால் விடுதிக்குள் பெண்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் பெட்டிக்குள் மறைத்து காதலியை அழைத்து செல்ல முயற்சித்தேன். ஆனால் அதற்குள் சிக்கி கொண்டேன் இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை' என தெரிவித்தார்.

மேலும் இது பற்றி இளம் பெண்ணிடம் விசாரிக்கும்போது. ‘இருவரும் தனிமையில் சந்திக்க முடிவு செய்தோம். அதற்கு விடுதிதான் சரியான இடம் என்று காதலன் கூறினார். எப்படி செல்வது என்று திட்டமிட்டபோது, இந்த யோசனை தென்பட்டது' என்றார். இந்த சம்பவம் விடுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களின் ஹாட்டாக பரவி வருகிறது. இந்த வீடியோவாவில் குறிப்பிடப்படும் சம்பவம் புகழ்பெற்ற  கல்வி நிறுவனத்தில் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில், அக்கல்வி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்.பி கார்,  இதனை மறுத்து உள்ளார்.  தங்கள் கல்வி நிறுவனங்களில் இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் 2019-ம் ஆண்டில் இதுபோல ஒரு வீடியோ பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.  இது பழைய வீடியோவாக இருப்பினும் தற்போது இது இணையவாசிகளிடையே புதிய டிரெண்டை உருவாக்கியிருக்கிறது. இந்த வீடியோவை இணையத்தில் பார்த்தவர்கள் சிரித்து சிரித்தே செத்துவிடுவோம் என பதிவிட்டுள்ளனர். காதலியை மறைத்த காதலன் குறித்த பல்வேறு மீம்கள் இணையத்தில் பகிரப்படுகின்றன. #Manipal என்ற ஹேஷ்டேகில் இது தொடர்பான மீம்களை பார்த்து ரசியுங்கள்.