பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் சீனாவில் இன்று தொடங்கும் நிலையில், கல்வான் தாக்குதல் ராணுவ வீரரை ஒலிம்பிக் தீபத்தை ஏந்துபவராக நியமித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொடக்க விழாவை புறக்கணிக்க இந்தியா முடிவு செய்து உள்ளது.

24 வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், சீன தலைநகர் பீஜிங்கில் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும்  ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இதில் சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட மொத்தம் 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டிகளில் பங்கேற்கிறார்கள். 

அதன் படி, இந்தியா சார்பில் ஒரே வீரராக ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் ஆரிப் கான் மட்டுமே தகுதி பெற்று உள்ளார். 

அதுவும், ஐஸ் ஆக்கி, பனிச்சறுக்கு, ஸ்பீடு ஸ்கேட்டிங் உள்பட 15 வகையான விளையாட்டுகள் நடைபெறுகிறது. 

அவற்றுடன், கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பிரமாண்டமான தொடக்க விழாவானது, பீஜிங்கில் உள்ள பறவைக்கூடு என்னும் ஸ்டேடியத்தில் இன்றைய தினம் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. 

இந்த போட்டியை, சீன அதிபர் ஜின்பிங் தொடங்கி வைக்கிறார். 

இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி விழாவில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட பல நாட்டு தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் ஈடுபட்ட சீனா ராணுவத் தளபதியை மெகா விளையாட்டு நிகழ்விற்கு அதன் தீபமேந்துபவராக நியமித்து, சீனா கௌரவித்திருக்கிறது. சீனாவின் இந்த செயல், இந்தியாவை கடுமையாக கோபத்திற்கு ஆட்படுத்தி உள்ளது.

அதாவது, 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் இந்தியா சார்பில் 20  வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டு காயமடைந்த சீன படையின் கமாண்டர் கியூ பபாவுக்கு குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை தொடர் ஓட்டமாக எடுத்து செல்லும் வாய்ப்பை, இந்த முறை சீனா அவருக்கு வழங்கி உள்ளது. 

இந்த நிலையில் தான், சீன ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்து இருக்கிறது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் பேசும் போது, “ஒலிம்பிக் போன்ற நிகழ்ச்சிகளை சீனா அரசியலாக்க முயற்சிப்பது வருத்தம் அளிக்கிறது என்றும், குளிர்கால ஒலிம்பிக் தொடக்க மற்றும் நிறைவு விழாவில் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொள்ளமாட்டார்கள்” என்றும், அவர் கூறியுள்ளார்.

இதே போல், “தூர்தர்ஷனும் தொடக்க மற்றும் நிறைவு விழாவை ஒளிபரப்பு செய்யப்போவதில்லை” என்றும், அறிவித்து உள்ளது.

குறிப்பாக, “சீனாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் காரணமாக, போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக” அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் ஏற்கெனவே அறிவித்து உள்ளது. 

இதன் மூலமாக, அந்த நாட்டு அதிகாரிகள் ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்றும், ஆனால் அந்த நாட்டு வீரர்கள் போட்டியில் களம் இறங்குவார்கள் என்றும் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிக முக்கியமாக, இவ்விழாவில் பங்கேற்பதற்காகவும், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட அந்நாட்டின் உயர் மட்டத் தலைவர்களை சந்திப்பதற்காகவும் பாகிஸ்தான் பிரதமர் 4 நாள் அதிகாரபூர்வ அரசுப் பயணமாக சீனா சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.