தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி வைத்துள்ள நிலையில் 5 ஆம் தேதியான நாளைய தினம் தமிழக சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

அதாவது, தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பான சட்ட முன்வடிவினை ஆளுநர் ரவிக்கு, தமிழக அரசு அனுப்பி வைத்திருந்த நிலையில், அதனை தமிழக ஆளுநர் ரவி, தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் தான், தமிழக ஆளுநர் ரவியின் இந்த நடவடிக்கையால், “தமிழக அரசு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்ய” தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நாளை தினம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன் படி, நாளை காலை 11 மணி அளவில் தமிழக அனைத்து கட்சி கூட்மட் நடைபெறும். 

அந்த ஆலோசனை கூட்டத்தில், “தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வடிவு கடந்த 13.9.2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பி” வைக்கப்பட்டது.

ஆனால், இந்தச் சட்ட முன்வடிவை தமிழக ஆளுநர் ரவி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காத நிலையில், “இதனை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். 

என்றாலும், இந்தச் சட்ட முன்வடிவு மத்திய அரசுக்கு அனுப்பப்படாத நிலையில், அந்தச் சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் ரவி, சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி வைத்து உள்ளதாகக் குறிப்பிட்டு, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அத்துடன், “நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவானது, கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானதாக இருப்பதாகவும்” அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

ஆனால், “இந்த நீட் தேர்வானது ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானதாகவும், பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாகவும் அமைந்து உள்ளது என்பதிலும், இந்த தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சமூக நீதிக்கு எதிரானதாக உள்ளது என்பதிலும் தமிழக மக்கள், அரசியல் கட்சியினர், சமூக சிந்தனையாளர்கள் என அனைவரிடமும் அசைக்க முடியாத கருத்தொற்றுமை” தமிழகத்தில் நிலவி வருகிறது. 

இதன் அப்படையில் தான், இந்த நீட் தேர்வு முறை நமது மாணவர்களை பாதித்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து, அவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றைக் களையக் கூடிய வகையில் சரியான மாற்று மருத்துவ மாணவர் சேர்க்கை முறை குறித்து பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே, நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு கோரும் சட்டமுன்வடிவு நமது சட்டமன்றத்தில் 13.9.2021 அன்று நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதிருநதது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான், தமிழக அரசின் அடுத்த கட்ட நடிக்கை குறித்து முடிவு செய்ய காலை 11 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசு நடத்துகிறது. ஆனால், இந்த ஆலோசனை கூட்டத்தை தமிழக பாஜக புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக பேசிய பாஜக சட்டமன்ற குழு உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “நீர் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது” என்று, திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.