ஹைதராபாத்தில் தையல் தொழிலாளியான கணவர், தனது விருப்பப்படி ப்ளவுஸ் தைத்து தராததால் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அம்பர்பேட் பகுதியில் உள்ள கோல்நக திருமலா நகரில் கணவர் ஸ்ரீனிவாஸ் மற்றும் பள்ளி செல்லும் இரு குழந்தைகளுடன் 35 வயதான விஜயலட்சுமி வசித்து வந்துள்ளார். 

விஜயலட்சுமியின் கணவர் வீடு வீடாகச் சென்று புடவை மற்றும் பிளவுஸ் துணிகளை வியாபாரம் செய்து வருபவர். ஸ்ரீனிவாஸ் வீட்டிலிருந்தும் துணிகளை தைத்துக் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது மனைவி விஜயலட்சுமிக்காக நேற்று பிளவுஸ் ஒன்றை தைத்து கொடுத்துள்ளார். ஆனால் அந்த பிளவுஸ் அவருடைய மனைவிக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.

கணவர் ஸ்ரீனிவாஸிடம் பிளவுஸை தன்னுடைய விருப்பப்படி மீண்டும் தைத்து தருமாறு விஜயலட்சுமி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கணவர் ஸ்ரீனிவாஸ் மறுத்துள்ளார். இதனால் விஜயலட்சுமி மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

 அதன்பின் கணவர் ஸ்ரீனிவாஸ் கடைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மாலை பள்ளி முடிந்து விஜயலட்சுமி – ஸ்ரீனிவாஸ் தம்பதியின் இரண்டு குழந்தைகளும் வீட்டிற்கு வந்துள்ளனர். குழந்தைகள் இருவரும் படுக்கை அறை பூட்டி இருப்பதை கண்டு திறக்க முற்பட்டுள்ளனர். 

HYDERABAD BLOUSE

அம்மா அம்மா என்று கூப்பிட்டவாறு தட்டிப்பார்த்தும் விஜயலட்சுமி திறக்கவில்லை. இதனால் பதற்றமான குழந்தைகள் உடனடியாக தந்தை  ஸ்ரீநிவாஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

குழந்தைகளிடம் இருந்து தகவல் வந்ததும் ஸ்ரீனிவாஸ் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.  நீண்ட முயற்சிக்கு பின் கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கணவர் ஸ்ரீனிவாஸ் மற்றும் குழந்தைகளுக்கு  அதிர்ச்சி காத்திருந்தது. 

மனைவி விஜயலட்சுமி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது தொடர்பாக அம்பர்பேட்டை இன்ஸ்பெக்டர் பி.சுதாகர் கூறுகையில், 36 வயதுடைய பெண் விஜயலட்சுமி தற்கொலைக் குறித்து கடிதம் எழுதாததால் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்

கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில், 2 குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.