“சொந்த நாட்டு மக்களை கொன்றது ராணுவத்தின் பச்சை படுகொலை, அதிகார திமிர், பிரதமர் மோடி அமைதி காப்பது வெட்கக் கேடானது” என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சீறி பாய்ந்து உள்ளார்.

நாகலாந்து துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், சொந்த நாட்டு அப்பாவி மக்கள் மீது நமது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இது வரை 19 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

முக்கியமாக, இந்திய ராணுவத்திற்கு எதிராக மிக கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்து உள்ள இந்த சூழலில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது கண்டனத்தை மிகவும் ஆக்ரோஷமாக பதிவு செய்திருக்கிறார். 

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “அப்பாவி பழங்குடி மக்கள் 13 பேர், இந்திய ராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி தருகிறது” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“நாடு முழுவதும் பெரும் கொதி நிலையை உருவாக்கியிருக்கும் இச்சம்பவத்தின் மூலம் மக்களின் பாதுகாப்பும், மக்களாட்சியும் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது என்றும், இது மக்களுக்கான நாடா? மக்களைக் கொன்றொழிக்கும் சுடுகாடா? என உள்ளச் சீற்றம் ஏற்படுகிறது” என்றும், மிகவும் காட்டமாக கூறியுள்ளார். 

“பழங்குடியினரைப் படுகொலை செய்து விட்டு, பயங்கரவாதிகள் என நினைத்துத் தவறுதலாகச் சுட்டுக் கொன்று விட்டோம் எனக் காரணம் கற்பிக்க முயலும் ராணுவத்தினரின் செயல் மிக இழிவானது” என்றும், சீமான் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 

“அந்நிய ஆக்கிரமிப்புகளில் இருந்தும் இயற்கைச் சீற்றங்களில் இருந்தும் சொந்த  மக்களைக் காப்பாற்ற உருவாக்கப்பட்டது நமது ராணுவம், இம்மண்ணின் ஆதி தொல்குடிகளையே காக்கை குருவியைப் போல சுட்டுக்கொலை செய்தது கடும் கண்டனத்துக்குரியது” என்றும், சீமான் கூறியுள்ளார். 

“எதன் பொருட்டும் இது போன்ற பச்சைப் படுகொலைகளை அரசப் பயங்கரவாத செயல்களை ஒரு நாளும் ஏற்க முடியாது” என்று தெரிவித்துள்ள சீமான், “சொந்த நாட்டு மக்கள் மீதே ராணுவத்தினரால் ஏவப்பட்ட இத்தகைய அரச வன்முறையை பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாக எதிர்க்கிறேன்” என்றும், துணிச்சலுடன் தெரிவித்து உள்ளார்.

“உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலோ, கொலை செய்த ராணுவ வீரர்களுக்குக் கண்டனமோ பதிவு செய்யாது பிரதமர் மோடி அமைதி காப்பது வெட்கக் கேடானது” என்றும், பிரதமர் மோடி மீது சீமான் சீறி பாய்ந்துள்ளார்.

மேலும், “பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கையும் அதிகாரத் திமிரில் செய்யும் அநீதிகளையும் அட்டூழியங்களையும் நாட்டு மக்கள் நீண்டகாலம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும், இவற்றுக்கான எதிர்வினையை, பதிலடியைக் கட்டாயம் ஜனநாயக முறையிலேயே திருப்பித் தருவார்கள் என அறுதியிட்டுக் கூறுகிறேன்” என்றும், குறிப்பிட்டு உள்ளார். 

“கொன்றொழித்த ராணுவ வீரர்களைக் கொலை வழக்கின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும், கொலையுண்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றும், சீமான் வலியுறுத்தி கூறியுள்ளார்.