தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால் அடுத்ததாக அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில்,  வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 26ம் தேதி ரிலீசாக உள்ளது.

இதனையடுத்து ராணா புரோடக்சன் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்க இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் “லத்தி சார்ஜ்" திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்து வரும் லத்தி சார்ஜ் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே நடிகர் விஷால் முதல்முறை இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த ருசிகர தகவல் வெளியானது.கடந்த 2017ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து துப்பறிவாளன் 2 திரைப்படம் தயாராக தொடங்கியது.

இயக்குனர் மிஷ்கினின் கதை திரைக்கதையில் விஷால் இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். விஷாலுடன் இணைந்து பிரசன்னா, ரகுமான், நாசர், ஜெயப்பிரகாஷ் மற்றும் கௌதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக வருகிற 2022-ஆண்டு ஜனவரி மாதம் லண்டனுக்கு படக்குழு செல்ல இருப்பதாகவும், லண்டனில் ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க  உள்ளதாகவும், நடிகர் விஷால் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து துப்பரிவாளன் 2 படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.