இஸ்லாமியர்கள் செய்யும் இந்துக் கடவுள் சிலைகளை நாம் வாங்க கூடாது என்றும், ஏப்ரல் 14ஆம் தேதி முதல் இதுதொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாநிலம் தழுவிய அளவில் நடத்த உள்ளதாகவும் மண்டியா மாவட்டத்தில் உள்ள செலுவ நாராயணசாமி கோவில் தலைமை குருக்கள் அறிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கர்நாடகாவில் உள்ள இந்துத்துவா அமைப்பினர்கள் இந்து கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் வணிகம் செய்ய அனுமதி கிடையாது என்றும் ஹலால் மாமிசத்தை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் மசூதிகளில் ஒலி பெருக்கியை தடை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு சர்ச்சைக்குரிய பிரச்சாரங்களை முன்னெடுத்து வைத்தனர். 

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டம் நடத்தினர். இதனால் வன்முறை ஏற்பட்டது.

இதற்கிடையில் கர்நாடக ஐகோர்ட்டு மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும் அப்போது முஸ்லிம் மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்தனர். இதைப்பார்த்த கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் போலீசார் மாணவிகளிடம் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்புக்குள் செல்லும்படி தெரிவித்தனர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். 

கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.  இதை தொடர்ந்து ஐகோர்ட்டு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்' என தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாதகிரியில் முஸ்லிம் மாணவிகள் தேர்வை புறக்கணித்தனர்.

இந்நிலையில் ஹலால் மாமிசத்தை இந்துக்கள் வாங்கக்கூடாது என பஜ்ரங் தள் அமைப்பினர் கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு வெளியிட்டு 24 மணி நேரத்திற்குள் ஹலால் மாமிசம் வழங்கப் மறுத்த கடைக்காரர் மீதும் உணவக உரிமையாளர் மீதும் இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் இந்துத்துவா அமைப்பினர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் கடைகளுக்குச் சென்று ஹலால் இல்லாத மாமிசத்தை வழங்கவேண்டும் ஹலால் இல்லாத உணவை பரிமாற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கடைக்காரர்கள் ஹலால் இல்லாமல் செயல்படும் கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிய நிலையில், இரண்டு கடை உரிமையாளர்கள் மீது இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹொசா மனை என்ற பகுதியில் தோசிப் என்ற மாமிச கடைக்காரர் மீதும் பலைய பத்ராவதி பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் மீதும்‌ தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் காவல்துறையிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்த நிலையில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்பொழுது முஸ்லிம் மதத்தினர் வடித்துக் கொடுக்கும் சிலைகளை இந்துக்கள் வாங்க கூடாது என மண்டியாவில் உள்ள மடாதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். மண்டியா மாவட்டம் மேல்கோட்டை பகுதியிலுள்ள செலுவ நாராயணசாமி கோவில் தலைமை குருக்களான சீனிவாஸ் குருஜி இந்த சர்ச்சைக்குரிய பிரச்சாரத்தை முன்னெடுத்து வைத்துள்ளார். இந்த பிரச்சாரம் குறித்து வரும் ஏப்ரல் 14-ம் தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதனைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மாம்பழம் விற்பனையில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு இந்துக்கள் பழங்களை விற்க கூடாது எனவும் இந்துத்துவ அமைப்பினர் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் பெரும் தொழிலதிபரான பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மஜூம்தார் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறான பிரச்சாரங்கள் கர்நாடக மாநிலத்தில் தொழில் முதலீட்டை பாதிக்கும் என தெரிவித்து தனது அதிருத்தியை பதிவு செய்துள்ளார்.