தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வரிசையாக ஹாரர் காமெடி திரைப்படங்களை கொடுத்து தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குநர் ராம்பாலா. முன்னதாக இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து வெளிவந்த தில்லுக்குதுட்டு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

தில்லுக்குதுட்டு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரான தில்லுக்குதுட்டு பார்ட் 2 திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் அடுத்த படைப்பாக இடியட் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. இதனையடுத்து இயக்குனர் ராம் பாலாவின் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது.

முன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன்.T.R கதாநாயகனாக நடித்து வெளிவந்த மாநாடு திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. மாநாடு திரைப்படத்தில் மிரட்டலான காவல்துறை அதிகாரியாக நடித்த நடிகர் S.J.சூர்யா படத்தில் பேசிய “வந்தான் சுட்டான் ரிப்பீட்டு” வசனம் வேற லெவல் ட்ரெண்டானது. இந்நிலையில் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படத்திற்கு “வந்தான் சுட்டான் ரிப்பீட்டு” என பெயரிடப்பட்டுள்ளது.

Two Movie Buffs தயாரித்துள்ள வந்தான் சுட்டான் ரிப்பீட்டு படத்தில் சந்திரமௌலி, மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் ரெபா மோனிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சேவிலோராஜா ஒளிப்பதிவில் சந்தோஷ் தயாநிதி மற்றும் KC.பால சாரங்கன் இணைந்து இசையமைத்துள்ளனர். வந்தான் சுட்டான் ரிப்பீட்டு படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.