“இந்தியாவில் வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதமானது, எந்த மாற்றமும் இன்றி 4 சதவீதமாகவே தொடரும்” என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார்.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் கோரத் தாண்டவம் ஆடிய நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக பொருளாதாரமே சிதறிப்போய் உள்ளது.

அதன் காரணமாகவோ என்னவோ, இந்தியாவின் அண்டை நாடுகளாக இருக்கும் இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட உலகின் சில நாடுகள் மிக கடுமையான அளவில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இதனால், இலங்கையிலும் சரி, பாகிஸ்தானிலும் சரி, அங்கு மக்கள் புரட்சி ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தான், “இந்தியாவின் அண்டை நாடுகளில் நிலவி வரும் பொருளாதார சிக்கல், இன்னும் சில மாதங்களில் இந்தியாவிலும் எதிரொலிக்கலாம்” என்கிற ஒரு கருத்தும் தற்போது முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தான், “இந்தியாவில் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக நீடிக்கும்” என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்” தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக இன்றைய தினம் செய்தியாளர்கள் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “இந்திய வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்தா மாற்றம் இல்லை” என்று, குறிப்பிட்டார்.

“குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போவில் எந்த மாற்றமும் இன்றி, 4 சதவீதமாகவே தொடரும்” என்றும், அவர் கூறினார்.

“11 வது முறையாக வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை என்றும், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்திலும் மாற்றம் இருக்காது” என்றும், தெரிவித்தார்.

அத்துடன், “இந்திய வங்கிகள் வைத்து உள்ள வைப்புத் தொகைக்கு ஆர்பிஐ தரும் ரிசர்வ் ரெப்போ வட்டி 3.35 சதவீதத்தில் இருந்து, 3.75 சதவீதமாக உயர்ந்து உள்ளது” என்றும், அவர் கூறினார்.

மேலும், “ரஷ்யா - உக்ரைன் போரால், பணவீக்க விகிதம் 5.7 சதவீதம் ஆக உயரக் கூடும் என்றும், இப்படியாக பணவீக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது” என்றும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

“இந்த நிதியாண்டில் பணவீக்கம் 5.7 சதவீதமாக உயரும் என்றும், முன்பு பணவீக்கம் 4.5 சதவீதமாக இருக்கும்” என்று, அவர் கூறினார். 

“பணவீக்கம் அதிகரித்து வருவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும்” என்றும்,  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சுட்டிக்காட்டினார்.

“2022-23 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் ஆக இருக்கும் என்றும், ஏற்கனவே பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், 0.6 சதவீதம் வளர்ச்சி குறையும் என்று, தற்போது கணிக்கப்பட்டு உள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

“உக்ரைன் போர் பல புதிய சிக்கல்களை உருவாக்கி உள்ளதால், இந்தியாவின் பணவீக்கம் அதிகரிக்க காரணம்” என்றும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.