தேசிய குடும்ப சுகாதார அமைப்பு சார்பாக 18 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் எடுக்கப்பட்ட ஆய்வில் கணவன் அடிப்பது நியாயமானதா? என்ற கேள்வி கேட்கப்பட்டநிலையில், பெண்கள் அது சரிதான் என்று அதிர்ச்சி அடையும் வகையில் தெரிவித்துள்ளனர்.

தற்காலத்தில் பெண்கள் அதிக அளவில் படிப்பு, வேலை, குடும்பம் என எல்லாவற்றிலும் முதன்மையானவர்களாக சாதித்து காட்டி வருகின்றனர். ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்ற வகையில் பெண்கள் தற்போது முக்கிய பெரிய பொறுப்புகளில் வகித்து வருகின்றனர்.

பெண்களின் கருவுறுதல் விகிதங்கள் குறைந்து வருவதன்  மூலமும், வேலையில் பெண்களின் வங்கிக் கணக்குகள் வளர்ச்சியடைவதன் மூலமும் அவர்கள் அதிக அதிகாரம் பெற்றவர்களாக இருக்கலாம். ஆனாலும்  தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறை தாக்குதல்கள் இருந்து வருகின்றன் என சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்து உள்ளது.

HUSBAND WIFE

18 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் எடுக்கப்பட்ட ஆய்வில் கணவன், மனைவியை அடிப்பது  நியாயமானதா?  என்ற கேள்வி கேட்கபட்டது. புதன்கிழமை, இந்த ஆய்வுகளின் முடிவு வெளியிடப்பட்டது. 

அதன்படி அசாம், ஆந்திரப் பிரதேசம், பீகார், கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் இதில் பங்கேற்றன.

மனைவி கணவனிடம் கூறாமல் வெளியே சென்றால், வீட்டையோ குழந்தைகளையோ புறக்கணித்தால், மனைவி கணவனுடன் வாதிட்டால், மனைவி உணவை சரியாக சமைக்கவில்லை என்றால், மனைவி  துரோகி என்று சந்தேகப்பட்டால்,  மாமியார்களை மதிக்கவில்லை என்றால் என மனைவியை அடிப்பதற்கான காரணங்கள் ஆய்வில் பட்டியலிடப்பட்டது.

இதில்  83.8 சதவீத பெண்கள், ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிப்பதை ஏற்கலாம் என கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர். அதில் தெலுங்கானா முன்னணியில் உள்ளது.  அதே நேரத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் 14.8 சதவீதம் என குறைவாக உள்ளது.  

ஆண்களில் கர்நாடகா முன்னணியில் உள்ளது. 81.9% பேர் இத்தகைய நடத்தை நியாயமானது என்று கூறியுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் 14.2% பேர் சரியானது என்று தெரிவித்துள்ளனர்.  

ஆந்திரப்பிரதேசம்  (83.6%), கர்நாடகா (76.7%), மணிப்பூர் (65.7%), கேரளா (65.9%) ஆகியவை குடும்ப வன்முறையை நியாயப்படுத்தும் பெண்களின் அதிக சதவீதத்தைக் கொண்ட மாநிலங்களாகும்.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் ஆண்கள்  குடும்ப வன்முறையை முறையே 14.2% மற்றும் 21.3%  மிகக் குறைவாக ஏற்றுக்கொள்கின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனவரி 2018- ல் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களில் 52% பேர், கணவன் தனது மனைவியை அடிப்பது நியாயமானது என்று கருதினாலும், 42% ஆண்கள் மட்டுமே அதனை ஒப்புக்கொண்டனர்.

HUSBAND WIFE

சமீபத்திய ஆய்வில் மணிப்பூர், குஜராத், நாகாலாந்து, கோவா, பீகார், அசாம், மகாராடண்ட்ரா, கர்நாடகா, தெலுங்கானா, நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசம், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 18 மாநிலங்களில் 13 மாநிலங்களில் உள்ள பெண்கள் 'மாமியார்களுக்கு அவமரியாதை செய்தால், கணவன் மனைவியை அடிக்கலாம்' என்பதை தேர்ந்தெடுத்துள்ளனர். 

இதுகுறித்து பெண்கள் உரிமைகளுக்காகப் போராடும்  பாப்புலேஷன் பர்ஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சாரதா  கூறும் போது, “குடும்பத்துக்கும் கணவருக்கும் சேவை செய்வதே தங்களின் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களின் மனதில் இந்த வகையான ஆணாதிக்க மனநிலை ஆழமாகப் பதிந்துள்ளது”  என்று கூறியுள்ளார்.

திருமணமான பெண்களில் 18 முதல் 49 வயதுடைய பெண்கள் அதிகளவில் குடும்ப வன்முறைக்கு ஆளாகுவதில் 2 மடங்கு உயர்ந்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.