கள்ளக் காதல் ஆசைக்கு கணவன் இடையூறு செய்ததால் கொடூரத்தின் உச்சமாக, கணவனை உயிருடன் வைத்து பெட்ரோல் ஊற்றி மனைவியே எரித்த கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்து உள்ள பந்தரபள்ளி கிராமத்தில் தான் இப்படி ஒரு கொரூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

நாட்றம்பள்ளி அடுத்த உள்ள பந்தரபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுதாகரின் மகன் 38 வயதான சசிகுமார் என்பவர், கடந்த 2008 ஆம் ஆண்டு 28 வயதான பிரியா என்ற பெண்ணை காதலித்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார். 

இவர்களது திருமண வாழ்க்கை நல்ல முறையில் சென்றுகொண்டிருந்த நிலையில், இவர்களுக்கு 11 வயதில் பிரதீப் என்ற மகனும், 8 வயதில் பிரித்திகா என்ற மகளும் உள்ளனர்.

இரு குழந்தைகளும் பிறந்த பிறகு, கணவன் சசிகுமார் வெளிநாட்டுக்குச் சென்று வேலை பார்த்து விட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் சொந்த ஊருக்கு வருகை தந்தார். 

ஆனால், கணவன் இருக்கிறார் என்பதை பொருட்படுத்தாமல் அவர் மனைவி பிரியா, அடிக்கடி தனியாக செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால், இது தொடர்பாக கணவன் சசிகுமார், பிரியாவிடம் கேட்டுள்ளார். இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவ்வப்போது வந்து சமாதானம் செய்துவிட்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்று முன் தினம் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கணவன் சசிகுமார், குடிபோதையில் வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது, மீண்டும் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து, கணவர் சசிகுமார் கட்டிலில் படுத்துக்கொண்டு தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவர் நன்றாகத் தூங்கிய பிறகு, நள்ளிரவு நேரத்தில், அவர் மனைவி பிரியா, ஏற்கனவே வீட்டில் வாங்கி வைத்திருந்த 2 லிட்டர் பெட்ரோலை கணவன் மீது ஊற்றி, கண் இமைக்கும் நேரத்தில் தீ வைத்து உள்ளார்.

இதில், தீ சசிகுமார் மீது பற்றி எரிந்துகொண்டிருந்த நிலையில், அவர் அலறியடித்து ஓடியுள்ளார். அப்போது, அவரின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகள் மீதும் தீ பரவியது. இதனால், அவரும் அலறி துடித்து உள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன் பிறகு, உயர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அவர்களை அனுமதித்தனர். அங்கு, 80 சதவீத தீக்காயங்களுடன் சசிகுமார், சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், தற்போது சசிகுமார் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன், அவரது 2 பிள்ளைகளும் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது குறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் பிரியாவை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், தான் உல்லாசமாக இருப்பதற்குத் தடையாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட ஒரு மாத காலமாக திட்டம் தீட்டியதாகவும், அதன் படியே பெட்ரோல் ஊற்றி கணவனை எரித்து கொன்றதாகவும், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அவரைக் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், பிரியாவின் கள்ளக் காதலன் பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.