சாத்தான்குளம் லாக்கப் டெத் வழக்கில் கைதான போலீசார் 9 பேரும், நீதிமன்றத்தை விட்டு மீண்டும் வாகனத்தில் ஏறும்போது, அங்கு கூடியிருந்த செய்தியாளர்களுக்குப் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்து ஆபாச வார்த்தைகளால் திட்டி மிகவும் கீழ் தரமாக நடந்துகொண்டதால், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால் “மீண்டும் அரங்கேறுமா சாத்தான்குளம் லாக்கப் டெத்?!” என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட அன்றே அவர்கள் இருவரும் மர்மமான முறையில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. 

குறிப்பாக, இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் இந்த கொடுஞ் செயலுக்கு பெரும்பாலான இந்திய பிரபலங்கள் முதல் சாமானிய மனிதர்கள் வரை தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். 

இது குறித்து, மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கை விசாரித்தது. இந்த விவகாரம் தொடர்பாகச் சாத்தான் குளம் காவல் நிலையத்தில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் போது, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களைத் தர மறுத்ததாகவும் கூறி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இமெயில் மூலம் புகார் அளித்த நிலையில், சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு எடுத்து வழக்குப் பதிவு செய்தது.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக சாத்தான்குளம் லாக்கப் டெத் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், எஸ்.ஐ. ரகு 
கணேஷ், பால்துரை தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 போலீசார் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த 5 போலீசாரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, அங்கு பணியில் இருந்த மேலும் 5 போலீசார் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மொத்தம் 10 போலீசார் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் அவர்கள் விசாரிக்கப்பட்டு வந்தனர். 

இதனையடுத்து, கொரோனா பாதிப்பு காரணமாக சிறப்பு சார்பு ஆய்வாளரான கைது செய்யப்பட்ட பால்துரை, பரிதாபமாக உயிரிழந்தார். சாத்தான் குளத்தில் தந்தை - மகன் போலீசார் விசாரணையில் தாக்கப்பட்டு, சிறைக் கைதிகளாக இருக்கும் போதே உயிரிழந்ததைப் போலவே, அதே வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ. பால்துரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது, காவல் துறை தரப்பில் பரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக மதுரை மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் மற்ற 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து, நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த 9 போலீஸ் கைதிகளும், வேனில் ஏறி அமர்ந்ததும் நடைமுறையில் உள்ள விதியை மீறி அவர்கள் தங்களது குடும்பத்தினரை சந்தித்து பேச, அங்கு பாதுகாப்பிற்கு வந்த போலீசார் அனுமதி அளித்தனர்.

இந்த காட்சிகளை அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்தனர். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த போலீஸ் கைதிகள், செய்தி சேகரித்த செய்தியாளர்களைத் துளியும் வாய் கூசாமல், தாங்கள் குற்றம் செய்தோம் என்று துளியும் கவலைப்படாமல், மிகவும் கீழ்த்தரமாக இறங்கிக் கெட்ட கெட்ட வார்த்தைகளால் சத்தம் போட்டு திட்டி தீர்த்தனர். அத்துடன், மிரட்டலின் உச்சமாக, வெளியே வந்தால், “உங்களை எல்லாம் கொன்று விடுவேண்டா” என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, அந்த போலீசார் பகிரங்கமாகவே, வெளிப்படையாகவே கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இதனால், அங்கு சூழல் மோசமானதை உணர்ந்த பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார், அந்த வாகனத்தை வேகமாக கிளப்பிக்கொண்டு சென்றனர். லாக்கப் டெத் மரணத்தில் கைது செய்யப்பட்ட போலீசார், சிறையில் இருக்கும் போதே சக செய்தியாளர்களுக்கு இப்படி வெளிப்படையாகவே கொலை மிரட்டல் விடுத்தும், ஆபாசமாக மற்றும் மிகவும் கீழ் தரமான வார்த்தைகளைச் சொல்லி திட்டும் இந்த போலீஸ்காரர்களா விடுதலை ஆகி நாட்டு மக்களை காக்கப்போகிறார்கள்?” என்ற சந்தேகமும், இவர்கள் வெளியே வந்தால், ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட சாத்தான்குளம் லாக்கப் டெத் மரணத்தைப் போலவே, மீண்டும் நிகழ்த்தமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?” என்று, அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். 

மேலும், செய்தியாளர்களை கீழ் தரமாகத் திட்டியும், அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததால், எங்களுக்கு உயிர்களுக்கு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அங்கு கூடியிருந்த சக செய்தியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், கொலை மிரட்டல் விடுத்த கைதிகளாக உள்ள 9 போலீசாஸ்க்காரர்களுக்கும் சக செய்தியாளர்கள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், இந்த பிரச்சனை மீண்டும் போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஏற்கனவே செய்தியாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தலைமை காவலர் பால்ராஜ் மிகவும் தரக்குறைவாக விமர்சித்த நிலையில், அவர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.