நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு, தல அஜித் மற்றும் எச்.வினோத் இணையும் படம் வலிமை. கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா தொற்று பரவலால் தாமதமாகி, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பிறகு, ஹைதராபாத்தில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. 

இதில், அஜித்தும் கலந்துகொண்டு நடித்து வந்தார். இந்தநிலையில், கடந்த வார படப்பிடிப்பின்போது, அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. வலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு விபத்து நடப்பது, இது இரண்டாவது முறையாகும். வலிமை படத்தின் அடுத்த அப்டேட் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் அஜித்குமாரின் மக்கள் தொடர்பு அலுவலருமான சுரேஷ் சந்திரா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், வணக்கம். வலிமை படத்தின் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு.. படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் அஜித் குமாரும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான போனிகபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து வலிமை அப்டேட்  குறித்து முடிவெடுத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும். நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

வலிமை திரைப்படத்தை இந்தியிலும் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியானது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. 

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகிறது. படக்குழு தரப்பில் இருந்து வலிமை படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.