“அதிமுக - பாஜக கூட்டணி வலிமையானது என்றும், திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி” என்றும். முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்து உள்ளார்.

தமிழக தேர்தல் களம் அனல் பறந்துகொண்டு இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சூராளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார்.

அதன் படி, இன்றைய தினம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுற்றுப் பயணம் செய்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களான பாமக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரிக்கிறார்.

இதில், ஓசூர் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி, தளி பாஜக வேட்பாளர் நரேஷ் குமார் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சற்று முன்பாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “ஓசூர் பகுதியில் 13 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்” என்று, நினைவு கூர்ந்தார். 

“கடந்த 2019 ஆம் ஆண்டு தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில், 600 கோடி ரூபாயில் புதிய தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும். 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஓசூர் பகுதியில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், “மின்சார இருசக்கர வாகனத் தொழிற்சாலை, ஓசூர் பகுதியில் லித்தியம் பேட்டரி தயாரிக்க தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளன என்றும், ஓசூா் பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன” என்றும், முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். 

அதே போல், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கும், படித்த இளைஞர்களுக்காகவும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக ஓசூர் தொழில் வளர்ச்சி அடைகின்ற பகுதியாக உள்ளது” என்று குறிப்பிட்ட முதலமைச்சர், “வாகன நெரிசலை தவிர்க்க ஜூஜூவாடியில் இருந்து 220 கோடியில் 18 கிலோ மீட்டர் புறவழிச் சாலை அமைக்கத் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது” என்றும், தெரிவித்தார்.

அத்துடன், ஓசூர் பகுதியில் சர்வதேச மலர் ஏல மையம் 20 கோடியில் அமைக்கப்படும் என்றும், பூக்கள் ஏல மையம் அருகில் பிரம்மாண்டமான காய்கறி மையம் அமைக்கப்படும் என்றும், ஓசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏழு அம்மா கிளினிக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன என்றும், முதலமைச்சர் கூறினார்.

குறிப்பாக, “அதிமுக அரசு தொழில் துறை சிறக்க தடையில்லாத மின்சாரம் வழங்கி வருகிறது என்றும், தடையில்லா மின்சாரம் தொடர்ந்து தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டு வருவதால் தான், புதிய புதிய தொழில் தொடங்குவதற்குத் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது” என்றும், அவர் கூறினார். 

முக்கியமாக, “அதிமுக - பாஜக கூட்டணி வலிமையானது என்றும், திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி” என்றும். முதலமைச்சர் பழனிசாமி, அப்போது விமர்சித்துப் பேசினார்.