பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ள நிலையில், அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுக ஆட்சியில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுக்கு எதிராக, துணை நடிகை சாந்தினி, காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், “அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கடந்த 5 ஆண்டுகளாக என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்து, என்னை மோசடியாக ஏமாற்றி உள்ளதாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். 

நடிகையின் இந்த பாலியல் புகாரின் பேரில் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், 6 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 இந்த வழக்கில், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, “முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து” நடிகை சாந்தினி சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், நடிகை சாந்தினி தாக்கல் செய்த மனு, அப்போது பார்வைக்கு வராத நிலையில், “வழக்கை 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அதற்குள் புகாரளித்த நடிகையின் ஆட்சேபனை மனுவை பட்டியலிடவும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. அது வரை, மணிகண்டனை கைது செய்யக் கூடாது” என்றும், நீதிமன்றம் இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது. 

அதே நேரத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்காத நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பாதுகாப்பு காவலருக்கு போலீஸ் சம்மன் அனுப்பினர். 

அதே போல், மணிகண்டனின் அரசு ஓட்டுநர், அலுவலக உதவியாளருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதனால், அவர்கள் 3 பேரும் விசாரணைக்காக நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. 

அதன் படி, முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்னாள் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் நேரில் ஆஜரான நிலையில், சென்னை காவல் துறையினர் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். 

இதனையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட வழக்கு கடந்த 9 ஆம் தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, “மணிகண்டனுக்கு எதிராகத் துணை நடிகை, மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு உள்ளதால், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அவருடைய முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனவும், காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது, “விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார் என்றும், இடைக்கால பாதுகாப்பாக முன் ஜாமீன் வேண்டும் எனவும், குற்றவாளி என்பதற்கு முகாந்திரம் இருந்தால், போலீசார் கைது செய்யட்டும்” என்றும், மணிகண்டன் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 இதனால், அன்றைய தினம் எந்த உத்தரவு பிறப்பிக்காமல் இருந்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் அந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, “முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதாக” கூறி, அவரது முன்ஜாமீன் மனுவை நீதிபதி அப்துல் குத்தூஸ் தள்ளுபடி செய்து, அதிரடியாக உத்தரவிட்டார். இதனால், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.