பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் டேராடூன் சென்ற நிலையில், அங்கிருந்து சிவசங்கர் பாபா தப்பியோடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது, குறித்து சமூக வலைத்தளங்களில் அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். 

இந்த புகார்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

முன்னாள் மாணவிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரிக்கத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா உட்பட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து, அந்த பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், 3 ஆசிரியர்கள் என 4 பேர் மட்டுமே கடந்த வாரம் விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆனார்கள். ஆனால், குற்றச்சாட்டுக்கு ஆளான முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சிவசங்கர் பாபா மட்டும், அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

 அத்துடன், குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா, நெஞ்சு வலி காரணமாக உத்ரகாண்ட் மாநிலம் டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, அவரது தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது, போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

அதாவது, ஒட்டுமொத்தமாக சிவசங்கர் பாபா மீது இது வரை 15 புகார்கள் காவல் துறையில் அளிக்கப்பட்டு உள்ளது. அந்தப் புகார்கள் குறித்து, சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என மொத்தம் 13 பிரிவுகளின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த வழக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கில், சிவசங்கர் பாபா தற்போது தலைமறைவாகி விட்டதாகவே காவல் துறையினர் கருதும் நிலையில், சாமியார் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்குகளைத் தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி, சிபிசிஐடிக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார்.

 இதனையடுத்து, சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார், நேற்றைய தினம் டேராடூன் விரைந்தனர்.

மேலும், சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால், சாமியார் சிவசங்கர் பாபா விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்ப கிளம்பியது.

இந்நிலையில், டேராடூனுக்குச் சென்ற தனிப்படை போலீசார், “சிவசங்கர் பாபா டேராடூன் தனியார் மருத்துவமனையில் இல்லை” என்பதை உறுதி செய்து உள்ளனர்.

இதனால், அவர் போலீசாருக்கு பயந்து, தப்பியோடி இருக்கலாம் என்ற அடிப்படையில் சிபிசிஐடி காவல் துறையினர், அவரைத் தேடும் பணியை முடுக்கிவிட்டு உள்ளனர். 

குறிப்பாக, சிவசங்கர் பாபா நேபாளம் தப்பிச் செல்லாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், சிவசங்கர் பாபாவின் பக்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேபாளத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் தரை மார்க்கமாக நேபாளத்திற்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில், வட மாநில சாமியர்களின் மடத்தில் சிவசங்கர் பாபா பதுங்கியுள்ளாரா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் தப்பியோடி உள்ளதாக வெளியாகும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.