கோயம்பேடில் உள்ள பாஜகவின் தலைமை தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,''எம்.ஜி.ஆரின் மறுவடிவமாக தான் பிரதமர் மோடியை தமிழக மக்கள் பார்க்கிறார்கள். அதனால் இந்த தேர்தலில் பாஜக கூட்டணி, தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் கடந்த தேர்தலில் பாஜக தனித்து நின்று  35 தொகுதியில் 2-வது இடத்தை பிடித்தது. மேலும் 60 தொகுதிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயித்ததும் பாஜக தான். இந்த சட்டமன்ற தேர்தலில் நானும் போட்டியிடுவேன். 


இந்துக்களையும், இந்து கடவுள்களையும் இழிவு படுத்தியவர்களை கண்டிக்கவே நாங்கள் வேல் யாத்திரை நடத்தினோம். வேல் யாத்திரையின் வெற்றியை தொடர்ந்து , அடுத்து தொகுதி வாரியாக  தேர்தல் பிரசாரம் தொடங்க இருக்கிறோம். வேலை நாங்கள் கையில் எடுத்ததும் அதை குற்றம் சொன்னார்கள். ஆனால் அவர்களும் கையில் வேலை இப்போது எடுத்துள்ளார்கள். தி.மு.க. கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் என்ன செய்தாலும் வேலைக்கு ஆகாது. 


இப்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். சசிகலா வருகையின் தாக்கம் என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது. அவர் என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பதை பொருத்தே சூழல் அமையும். அனைவருக்கும் பொது எதிரி தி.மு.க. என்று சசிகலா கூறி இருக்கிறார். அது உண்மைதான். ஆனால் அ.தி.மு.க.வில் சேருவாரா என்பதெல்லாம் அவர்களின் உட்கட்சி பிரச்சனை.


தமிழக மக்கள் மோடியின் திட்டங்களால் பலன் அடைந்துள்ளார்கள். அந்த பலன் இந்த தேர்தலில் வெளிப்படும். இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் நிச்சயம் இடம் பெறுவார்கள். ” என்றார்.