இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ‘ஆரோக்கிய சேது’ என்ற செயலியை சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதை பொதுமக்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகிறது.

இந்த செயலியை ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்பவர்கள், தாங்கள் இருக்கும் பகுதியில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா இல்லையா - எந்தளவுக்கு இருக்கிறது என்பது தெரிந்துவிடும். மேலும் இதை பதிவேற்றம் செய்த நபர், மற்றொரு நபரை கடந்து செல்லும்போது, அவருக்கு கொரோனா இருக்கும் பட்சத்தில் அதை அறிய முடியும்.

இந்த செயலிகள் பாதுகாப்பாக சொல்லப்பட்டாலும், இதன்மூலம் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் நடமாட்டத்தை கண்டறிந்து, அவர்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளவர்களை தனிமைப்படுத்த முடியும். இந்த செயலியால், தனிநபர்களின் தரவுகள் திருடப்படும் ஆபத்து உள்ளதாகவும் ஒருசாரார் கூறுகிறார்கள்.

அதன் அடிப்படையில், சவுரவ் தாஸ் என்பவர், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் கேள்விகள் கேட்டு ஒரு மனு அனுப்பி இருந்தார். அதில், ‘ஆரோக்கிய சேது’ செயலியை உருவாக்கியது யார்? எந்த சட்டத்தின்கீழ் அது இயங்குகிறது? அதில் சேகரிக்கப்பட்ட தரவுகளை கையாள தனிச்சட்டம் கொண்டுவரும் திட்டம் உள்ளதா? என்ற அவர் கேட்டிருந்தார்.

ஆனால், அந்த அமைச்சகம் எந்த தகவலும் அளிக்கவில்லை. தேசிய தகவல் மையமும் தகவல் அளிக்கவில்லை. இதையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டப்படி, மத்திய தகவல் ஆணையத்தில் சவுரவ் தாஸ் புகார் அளித்தார். மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ‘ஆரோக்கிய சேது’ செயலி உருவாக்கப்பட்டது பற்றி தங்களிடம் எந்த தகவலும் இல்லை என்று பதில் அளித்துள்ளது.

தேசிய தகவல் மையமும், தகவல் இல்லை என்று கைவிரித்து விட்டது. இதையடுத்து, தகவல் ஆணையர் வனஜா என்.சர்னா, தேசிய தகவல் மையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், தகவல்களை மறைப்பதற்காகவும், மழுப்பலான பதில் அளித்ததற்காகவும் மையத்துக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்று கேட்டுள்ளார்.

மேலும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக துணை இயக்குனர்கள் 2 பேருக்கும் நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

``ஆரோக்கிய சேது இணையதளத்தில், அதை தேசிய தகவல் மையம், மத்திய மின்னணு அமைச்சகம் ஆகியவை வடிவமைத்து, பராமரித்து, இயக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, தங்களிடம் தகவல் இல்லை என்று எப்படி மறுக்க முடியும்?" என்று கேட்டார்.

இந்நிலையில், ஆரோக்கிய சேது செயலியை சிறந்த நிபுணர்ககள் பங்களிப்புடன் தேசிய தகவல் மையம், வடிவமைத்து, பராமரித்து, இயக்கிவருவதாக மத்திய அரசு சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. ஆரோக்கிய சேது செயலியை சிறந்த நிபுணர்கள் பங்களிப்புடன் தேசிய தகவல் மையம், வடிவமைத்து, பராமரித்து, இயக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரோக்கிய சேது செயலியை இதுவரை 16 கோடியே 23 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்திருப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.