சென்னை கொளத்தூர் பகுதியில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 11-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில், சென்னை உட்பட தமிழநாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவந்தது . கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பல நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் கடந்த 4 நாட்களாக வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மைலப்பா தெரு , நேரு மண்டபம் பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் துவங்கி வைத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அத்துடன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் தேவைகளையும் கேட்டறிந்தார். சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்மா நகரில் தடுப்பூசி மற்றும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டதுடன் , மாதவரம் நெடுஞ்சாலை கமலாம்பாள் திருமண மண்டபத்தில் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு சத்து மருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையிலான குழு ஆய்வு செய்து இன்று அல்லது நாளை அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெள்ள சேதம் குறித்து பிரதமரை சந்தித்து நிதி கோரிக்கை வைக்க உள்ளோம் என்று கன்னியாகுமரிக்கு நாளை வெள்ள பாதிப்பை பார்வையிட செல்வதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இதனை தொடர்ந்து ஓட்டுப்போடாதவர்களுக்கும் சேர்த்து தான் என் சேவை என்றும் என்னுடைய வேலை மக்களுக்காக பணியாற்றுவது தான் மேலும் மக்கள் எனக்கு பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறாரகள். இன்றைக்கும் சொல்கிறேன் ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் இதுதான் என்னுடைய கொள்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.