விமான நிலைய அதிகாரிகளின் செயலால் கோபமடைந்த சித்தார்த்... காரணம் இதுதான்!
By Anand S | Galatta | December 28, 2022 14:50 PM IST
இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக படத்திற்கு படம் நல்ல கதாபாத்திரங்களையும் தரமான கதை கலங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் அருவம். தொடர்ந்து தெலுங்கில் நடிகர் சித்தார்த் மற்றும் சர்வானந்த் இணைந்து நடித்த மஹா சமுத்ரம் திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்து வருகிறார். சில தடைகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய CRPF அதிகாரிகளால் மிகுந்த துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டேட்டஸில் புகைப்படத்தோடு பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில்,
“மதுரை விமான நிலையத்தில் CRPF அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அவர்கள் எங்களிடம் ஹிந்தியில் தொடர்ந்து பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்னேன். இருப்பினும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஹிந்தியில் மட்டுமே பேசினார்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்று தெரிவித்தார்கள்” என நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் சித்தார்த்தின் அந்த பதிவு இதோ…