தமிழ்நாட்டில் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதாவது, தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலமானது, முடிந்த நிலையில், காலியாக உள்ள இடத்திற்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வருகிறது. 

அத்துடன், தமிழ்நாட்டில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கும் 9 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவும் திட்டமிடப்பட்டு வந்தன.

மேலும் தமிழகத்தில் நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தன.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்த தேர்தலை நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்து தீவிரம் காட்டி வந்தது. 

இது தொடர்பாக, சமீபத்தில் அனைத்துக் கட்சி கூட்டமும் நடத்தப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, முன்னதாக “தமிழகததில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்” என்று, மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியிருந்தது.

அதன்படி, சென்னையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், “தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக” அறிவித்தார். 

அத்துடன், “பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்” என்று, தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார். 

மேலும், “தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்படும்” என்றும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், தெரிவித்தார்.

 உள்ளாட்சி தேர்தல் அட்டவணை

- தேர்தல் வேட்புமனு தாக்கல் - ஜனவரி 28

- தேர்தல் வேட்புமனு தாக்கல் இறுதி நாள் - பிப்ரவரி 4

- வேட்பு மனு பரீசலனை நாள் - பிப்ரவரி 5

- வேட்புமனு வாபஸ் பெறும் நாள் - பிப்ரவரி 7

- தேர்தல் வாக்குப் பதிவு நாள்- பிப்ரவரி 19

- தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள் - பிப்ரவரி 22

இதனிடையே, சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதிலும், பட்டியலினப் பெண்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் சென்னை மாநகராட்சியும், தாம்பரம் மாநகராட்சியும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.