“தமிழ்நாட்டில் சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டசபையில் கடந்த 23 ஆம் தேதி முதல் துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. வரும் 13-ம் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் நிறைவடைய உள்ள நிலையில், இன்றைய தினம் சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது, சட்டப் பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

அதன் படி பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எப்போது அமைகின்றதோ, அப்பொழுதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் பாடுபடுகிற அரசாக திமுக அரசு விளங்கியிருக்கிறது” என்று, குறிப்பிட்டார். 

“சமூகத்தில் சதிகளாலும், சாதிகளாலும் புறக்கணிப்பட்டவர்களை அன்புக்கரம் கொண்டு அரவணைத்து, அவர்கள் தங்களிடம் தேங்கிக் கிடக்கும் திறமைகளையும், அவர்களால் சமூகம் பெறத்தக்க பங்களிப்புகளையும் வெளிக்கொண்டு வருவதில் அதிக அக்கறையை எப்போதும் காட்டி வரும் கொள்கைப் பிடிப்பைக் கொண்ட இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்” என்றும், குறிப்பிட்டு பேசினார்.

“இந்தியாவிலேயே முதன்முறையாக ஆதி திராவிடர்களுக்குக் கான்கிரீட் கூரையிலான தொகுப்பு வீடுகள், இரட்டைக் குவளை முறை ஒழிப்பு, சமத்துவபுரங்கள், சமத்துவ மயானத்திற்கு ஊக்கத் தொகை, உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தவே முடியாமலிருந்த பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகச்சியேந்தல், ஆகிய இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, சமத்துவப் பெருவிழா கொண்டாடியவை போன்ற எண்ணற்ற செயல்பாடுகளை இதற்கு எடுத்துக்காட்டாக இயம்ப இயலும் என்றும், முதலமைச்சர் தலைமையில் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டுமென்பது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய விதி” என்றும், சுட்டிக்காட்டினார்.

அத்துடன், “மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் என்கிற புதிய அமைப்பு ஒன்றை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் இந்த அரசு உருவாக்க சட்டம் இயற்றும் என்றும், அதற்கான சட்டமுன்வடிவ வரைவு இந்தச் சட்டமன்றத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்” என்றும், அறிவித்தார்.

மேலும், “ஆதி திராவிட நலத் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளைப் பொது நீரோட்டத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்கிற ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது என்றும், அதன் படி முதற்கட்டமாக, அப்பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அறிவுத்திறன் வகுப்பு, கணினிப் பயிற்சி போன்றவை பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும் என்றும், ஆனால், பள்ளிகளை நிருவகிப்பது  தொடர்ந்து ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத் துறையின் கைவசமே இருக்கும்” என்றும் கூறினார். 

“பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணி அமைப்பை நிர்வகித்தல், நிருவாகப் பணிகளைக் கையாளுதல் போன்றவற்றை அத்துறையே செயல்படுத்தும் என்றும், பள்ளிக் கல்வித் துறை அவற்றில் தலையிடாது” என்றும், அவர் தெரிவித்தார்.

முக்கியமாக, “வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை விரைவாக இறுதி செய்வதற்குத் தற்சமயம் தமிழ்நாட்டில் 18 சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன என்றும், மேலும் 4 புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்” அவர் கூறினார்.

அதே போல், “வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரை சமுதாயக் கண்ணோட்டத்துடன் அணுகி, முறையான நிவாரணம், வளமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்குவற்குத் தேவையான விழிப்புணர்வுப் பயிற்சிகள் சமத்துவம் காண்போம் என்கிற தலைப்பில் காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்களுக்கு நடத்தப்படும்” என்றும், முதலமைச்சர் கூறினார்.

“தமிழ்நாட்டில் பல கிராமங்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன என்று குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர், “இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக் கூடாது என்பதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்தகைய சிற்றூர்களுக்கு ஊக்கத் தொகையாக வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும்” என்றும், அவர் அறிவித்தார்.

குறிப்பாக, “ வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு, 85,000 ரூபாயிலிருந்து 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது என்றும், இனி இத்தொகை பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்த பட்சமாக ஒரு லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 12 லட்சம் ரூபாயாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும்” என்றும், அறிவித்தார்.

மேலும், “தமிழகத்தில் விழிப்புணர்வுக் கூட்டமே தேவையில்லை என்கிற நிலையை அடைவதே நம் இலக்கு என்றும், தமிழ்நாட்டு மக்களின் மனதில் மடைமாற்றத்தை ஏற்படுத்தி, நாம் அனைவரும் அய்யன் திருவள்ளுவர் கூறியதற்கேற்ப பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற ஒப்பற்ற தத்துவத்தின்படி இணைந்து வாழ அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.