“பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்” என்று, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். 

தமிழக சட்டசபையில் இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதன் படி, “பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்” என்று, அறிவித்தார்.

சட்டசபையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, 'இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார்” என்று, மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். 

“சமூக நீதி கதவைத் திறந்தது பெரியாரின் கைத்தடி என்றும், தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் சமூக நீதி இருப்பதற்கு காரணம் பெரியாரின் அடித்தளம்” என்றும், ஸ்டாலின் பெருமையோடு நினைவுகூர்ந்தார்.

“யாரும் எழுதத் தயங்கியதை எழுதியவர் என்றும், யாரும் பேச தயங்கியதை பேசியவர் பெரியார் என்றும்,  பெரியாரின் குருகுல பயிற்சி தான் திமுகவை உருவாக்கியது” என்றும், மு.க. ஸ்டாலின் புகழாரம் பாராட்டி பேசினார்.

அத்துடன், “பெரியாரின் போராட்டம் குறித்து பேசுவது என்றால், அவை 10 நாட்கள் ஒத்தி வைத்துவிட்டு தான் பேச வேண்டும் என்றும்,  சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு தான் பெரியாரின் இலக்கு” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், “பெரியார் உருவாக்கிய பகுத்தறிவு கூர்மையால் தமிழினம் சிந்தனை பெற்றது என்றும், இதனால் பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

முக்கியமாக, “செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாள் அன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உதறித் தள்ளுவோம் என்றும், பெண்களை சரிசமாக கருதுவோம் என்ற உறுதி மொழி எடுக்கப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிப்படத் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த அறிவிப்பு, சட்டமன்றத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. 

இது தொடர்பாக சட்டப் பேரவையில் பேசிய அதிமுக எம்எல்ஏ வைத்தியலிங்கம், “சாமானியனும் அரசியலுக்கு வரலாம் என்று அடித்தளமிட்டவர் பெரியார் என்றும். அதனால் முதல்வரின் அறிவிப்பை மனப்பூர்வமாக ஏற்கிறோம்” என்றும், கூறினார்.

“கடவுள் நம்பிக்கையோடு இருக்கும் பாஜக கட்சியும் பெரியாரின் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்ததற்கு வரவேற்பு தெரிக்கிறது” என்று, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.