“கப்பல் சார்ந்த துறையில் சிறந்து விளங்கும் தமிழர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கப்பலோட்டிய தமிழன் விருது 5 லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும்” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி 110 ன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உரையாற்றினார்.

இப்போது அவர் பேசும் போது, “தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சேலை வ.உ.சி சாலை என பெயர் மாற்றப்படும்” என்று குறிப்பிட்டு பேசினார்.

அத்துடன், “வ.உ.சி150 வது பிறந்த நாளையொட்டி, புதிய அறிவிப்புகளை பேரவையில் முதலமைச்சர் இன்றைய தினம் வெளியிட்டார். 

அந்த புதிய அறிவிப்பில், “நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சி பெயரில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்படும் என்றும், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டுக்கு கட்டப்படும் அரசு கட்டடங்களுக்கு வ.உ.சி பெயர் சூட்டப்படும்” என்றும், கூறினார். 

மேலும், “கோவை வ.உ.சி. பூங்காவில் வ.உ. சிதம்பரனார் முழு உருவ சிலை அமைக்கப்படும்” என்றும், குறிப்பிட்டார்.

குறிப்பாக, “கப்பல் தொடர்பான துறைகளில் சிறந்த பங்காற்றி வரும் தமிழருக்கு ஆண்டு தோறும் வ.உ.சி பெயரில் 'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது, 5 லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும்' என்றும் தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் சூப்பரான அறிவிப்பை வெளியிட்டார்.

“வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் நவீன டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும்” என்றும், முதலமைச்சர் அறிவித்தார்.

முக்கியமாக, “வ.உ.சி. எழுதிய புத்தகங்கள் புதுப்பிக்கப்பட்டு குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், வ.உ.சி. நினைவு நாளான நவம்பர் 18 ஆம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார். 

அதே போல், “அயோத்தி தாசர் பண்டிதரின் பெருமையை போற்றும் வகையில், சென்னையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மிக முக்கியமாக, “தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர். தமிழகத்தில் பௌத்த மறுமலர்ச்சியை தோற்றுவித்தவர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையைத் தொடங்கி வைத்தவர். தமிழன் என்ற அடையாளம் தந்தவர்” என்றும், அயோத்தி தாசர் பண்டிதர் பெருமைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்து பேசினார்.