தமிழக அரசு வழங்கி உள்ள நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. அந்த நாட்டில் அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்துபோனதால் இறக்குமதி பாதித்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை விஷம் போல ஏறி வருகிறது. எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர்.

அன்றாட தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடும் உயர்ந்திருக்கிறது. காகிதம் இல்லாததால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கூட நடத்த முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்துக்கு ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர், ரூ.28 கோடியில் 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டன.

அதனைதொர்ந்து இந்த பொருட்களை இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக ‘டான் பின்-99’ என்ற கப்பல் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த கப்பலில் கடந்த 2 நாட்களாக மருந்து பொருட்கள், பால் பவுடர்கள், நிவாரண பொருட்கள் கிரைன் உதவியுடன் கப்பலில் ஏற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் மருந்து பொருட்களை பொருத்தவரையில் முதல் கட்டமா க ரூ.8 கோடியே 87 லட்சத்து 9 ஆயிரத்து 593 மதிப்பில் 55 வகையான அத்தியாவசிய மருந்துகளும், 2 சிறப்பு மருந்துகளும் 700 அட்டை பெட்டிகள் கப்பலில் ஏற்றப்பட்டு உள்ளது. அதேபோல் 15 கிலோ எடை கொண்ட பால் பவுடர்கள் சுமார் 200 டன் வரை ஏற்றப்பட்டு உள்ளது. அதேபோல் 50 கிலோ எடையுள்ள அரிசி பைகள் 5 ஆயிரம் டன் அளவுக்கு ஏற்றப்பட்டு உள்ளது. தொடர்ந்து நிவாரணப்பொருட்கள் ஏற்றும் பணி நடந்து வருகிறது. கப்பலில் இருக்கும் இடத்தை பொறுத்து நிவாரணப்பொருட்கள் ஏற்றப்படுகிறது.

தொடர்ந்து  கப்பலில் நிவாரணப்பொருட்கள் ஏற்றும் பணி இன்று பகல் நிறைவடைந்ததும், மாலை 5 மணிக்கு சென்னை துறை முகத்தில் இருந்து இலங்கை கொழும்பு துறை முகத்திற்கு ‘டான் பின்-99’ கப்பல் புறப்படுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இதில் அமை ச்சர்கள், எம்.பி., எம். எல்.ஏ.க்க ள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சென்னை துறை முகத்தில் கப்பல் தொடர்பான ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறை பணிகளை நிறைவு செய்துவிட்டு, சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல், அடுத்த 44 மணி நேரத்தில் கொழும்பு துறைமுகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.