குன்னூரில் இருந்து ராணுவ வீரர்களின் உடல்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று நடு வழியில் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

bipin rawat

இதனால் விபத்துக்குள்ளான ஆம்புலன்சில் இருந்த ராணுவ வீரரின் உடல் மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு மாற்றப்பட்டு விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர் நேற்று  கோவை மாவட்டம் சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் நோக்கி கிளம்பினர். 

தொடர்ந்து  அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னுார்  காட்டேரி மலைப்பாதைக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில் மீட்பு பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் சென்றார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர்.

இந்நிலையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தரைப்படை ராணுவ தளபதி நரவனே, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்திரி, கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வெலிங்டன் ராணுவ சதுக்கத்தில் வைக்கப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்வு முடிந்து, 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு வந்தது .இதில் வழியெங்கும் பொதுமக்கள் சாலைகளின் இரு ஓரமும் நின்று தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர்.

இந்நிலையில் உடல்களை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பாதுகாப்பாக சென்ற போலீஸ் வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியது. வாகனத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை .இருப்பினும் அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தை தொடர்ந்து உடல்களை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் விபத்தில் சிக்கியுள்ளது. அதனால் விபத்துக்குள்ளான ஆம்புலன்சில் இருந்த ராணுவ வீரரின் உடல் மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு மாற்றப்பட்டு விமானப்படை தளத்திற்கு  கொண்டு செல்லப்பட்டது. ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ராணுவ வீரர்களின் உடல்களை எடுத்துச் சென்ற ஆம்புலன்சும் விபத்துக்குள்ளானது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.