வரும் 11-ம் தேதி 11 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

admk

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளில் திமுக அரசு சரியாக செயல்படவில்லை என திமுக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவிப்பு வெளியிட்ட நிலையில், வரும் 11-ம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து மாவட்ட தலைநகர்களில் நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

மேலும் பெட்ரோல், டீசல் மீதான தமிழ்நாடு அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை, வெள்ளம் பாதித்த மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ள பாதிப்புகளுக்கு பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு அளிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக சார்பில் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் 9.12.2021 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்ற 11.12.2021 சனிக்கிழமை காலை 11 மணியளவில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.