புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் தேடி அலைந்த பேச்சியம்மாள், தனது மகனை தேடுவதற்காக மட்டும் தனது கழுத்தில், காதில் இருந்த நகைகளை விற்று சுமார் 60 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார்.

புதுச்சேரியில் காணாமல் போன தன் மகனை, அவரது புகைப்படத்தை கொண்டு தனி ஒருவருராக இரண்டு ஆண்டுகளாக தேடி அலைந்துகொண்டிருக்கிறார், தூத்துக்குடியை சேர்ந்த 70 வயது தாய். தன் மகனை தேடுவதற்காக தான் அணிந்திருந்த நகைகளை விற்று, இதுவரை 60 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ள சோக சம்பவம் அரங்கேறியுள்ளது

இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த குருசாமி, பேச்சியம்மாள் தம்பதியினர், சலவைத்தொழில் செய்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் ரவி அவருக்கு 30 வயது. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு புதுச்சேரி வந்த போது, விபத்து ஒன்றில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பேச்சியம்மாவிற்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து 2019 ஆண்டு முதல் புதுச்சேரிக்கு கடந்த 2 ஆண்டுகளாக 21 முறை வந்து தேடிவிட்டு செல்கிறார். தன் மகனைத் தேடி புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்த பயனும் இல்லை. இருந்தாலும் அரசு மருத்துவமனை, புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் தேடி அலைந்த பேச்சியம்மாள், தனது மகனை தேடுவதற்காக மட்டும் தனது கழுத்தில், காதில் இருந்த நகைகளை விற்று சுமார் 60 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார்.

மேலும் தற்போது பணம் கையில் இல்லை என்பதால், அடுத்த முயற்சியாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இடம் மனு அளிப்பதற்காக, இன்று சட்டசபை வாசலில் அமர்ந்து முதலமைச்சருக்காக காத்துகொண்டு இருந்தார். தன்னிடம் வைத்துள்ள பையில், மகனை கண்டுபிடிக்க மனுக்கள், புகைப்படங்கள், தொலைபேசி எண்களை வைத்துள்ள அவர், சாலைகளில் யாரை பார்த்தாலும் அவர்களிடத்தில் தனது மகனின் புகைப்படத்தை காண்பித்து மகனை விசாரித்து கண்டுபிடித்து தரும்படி கதறும் காட்சி சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதனைத்தொடர்ந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இடம் மனு அளிப்பதற்காக இன்று சட்டசபை வாசலில் அமர்ந்து இருந்த அவர், முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தார். உடனடியாக இவரது மகனை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.