சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது சென்னை பாண்டி பஜாரின் தியாகராயர் சாலை அருகே அமைந்திருக்கும் RAINBOW ARCADE எனும் வணிக வளாகத்தில் இன்று பிப்ரவரி 6ஆம் தேதி  மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.3 மாடிகள் கொண்ட இந்த வணிக வளாகத்தில் துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் வங்கி கிளைகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. 

இதிலுள்ள ஒரு துணிக்கடையில் மின்கசிவு காரணமாக தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

இதனிடையே சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான திரு.சங்கர் கணேஷ் அவர்களின் மகனும் பிரபல நடிகருமான ஸ்ரீகுமார் கணேஷ் இன்று ஏற்பட்ட இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தில் சிக்கிக்கொண்டார். தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளில் பல பிரபலமான மெகா தொடர்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் ஸ்ரீகுமார் கணேஷ் குடும்பத்தோடு வணிக வளாகத்திற்கு சென்றிருந்தபோது தீ விபத்தில் சிக்கிக் கொண்டார். 

3-வது தளத்தில் தனது குடும்பத்தினர் உட்பட 70 பேர் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது சிக்கிக் கொண்டதாகவும் தீயணைப்பு துறையினரும் காவல்துறையினரும் மிகத் துரிதமாக செயல்பட்டதால் அனைவரும் உயிருடன் பாதுகாப்போடு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.