இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி தனக்கே உரித்தான பாணியில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் S.J.சூர்யா நடிகராகவும் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ளார். அந்தவகையில் கடைசியாக நடிகர் சிலம்பரசன்.T.R. நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டு மழையில் நனைந்தார் S.J.சூர்யா.

முன்னதாக S.J.சூர்யா நடிப்பில் இறவாக்காலம் திரைப்படம் நிறைவடைந்து விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து S.J.சூர்யா நடித்துள்ள டான் திரைப்படம் வருகிற மார்ச் 25ஆம் தேதி ரிலீசாகிறது. மேலும் கடமையை செய் & பொம்மை உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ள நிலையில், நடிகர் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் மிரட்டலான வில்லனாக S.J.சூர்யா நடிக்கவிருக்கிறார்.

இதனிடையே முன்னதாக இயக்குனர் தமிழ்வண்ணன் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து S.J.சூர்யா நடித்த திரைப்படம் உயர்ந்த மனிதன். தயாரிப்பாளர்களுக்கும் அமிதாப் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்சினைகள் முடிவுக்கு வந்து மீண்டும் உயர்ந்த மனிதன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. புதிய தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உயர்ந்த மனிதன் படம் தயாராக உள்ளதாக தெரிகிறது.

தமிழில் உயர்ந்த மனிதன் என்ற பெயரிலும் ஹிந்தியில் தி கிரேட் மேன் என்ற பெயரிலும் இரு மொழிகளில் தயாராகும் இத்திரைப்படத்தில் முதல் முறையாக ஏற்றிய S.J.சூர்யா, நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் விரைவில் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.