அதிமுக பொதுக்குழுவில் குண்டர்களை வைத்து கலவரம் நடத்த உள்ளதாக DGP சைலேந்திர பாபு வரை பறந்த புகாரால், பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

“அதிமுகவின் பொதுச்செயலாளர் யார்?” என்கிற சர்ச்சை தான், தமிழ்நாட்டின் தற்போதைய டாக் ஆஃப் டவுனாக இருக்கிறது.

அதன்படி, அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து, ஓபிஎஸ் - இபிஎஸ் இன்று 8 வது நாளாக தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

எனினும், அதிமுக பொதுக்குழு நடக்கவிருக்கும் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் முழுவீச்சில் பொதுக்குழு தொடர்பான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

அதன் ஒரு பணியாக, ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். என இருவரும், ஒருவருக்கொருவர் பூங்கொத்து கொடுப்பது போன்ற கட் அவுட்கள் மண்டபத்தின் முகப்புகளில் வைக்க தயார் செய்யப்பட்டு வருகின்றன.

என்றாலும்,, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் இருக்கும் நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்ட தடை விதிக்க வேண்டும் என்கிற மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஒரு முக்கியமான புகார் ஒன்றும் அதிமுக பொதுக்குழு தொடர்பாக வந்திருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, “அதிமுக பொதுக்குழுவை எப்படியாவது கூட்டி அதன்படி அதிமுகவின் அதிகார பூர்வ பொதுச் செயலாளர் பதவிக்கான தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி ஒரு பிடியாக இருக்கிறார்” என்றும், அதே நேரத்தில், “நான் அதிமுக ஒருகிணைப்பாளராக இருக்கும் போது, நீங்கள் எப்படி அதிமுக பொதுக்குழுவை கூட்டுறீங்கன்னு நான் பார்க்குறேன்” என்று, ஓ பன்னீர்செல்வம் இன்னொரு பக்கம் பிடிவாதமாக இருக்கிறார் என்றும், கூறப்படுகிறது.

இதனால், “திட்டமிட்டப்படி வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடப்பதே சந்தேகம்” என்கிற தகவலும் இன்னொரு பக்கம் பேசப்படுகிறது.

“அதையும் மீறி பொதுக்குழு கூடினால், அதனை பாதியில் முடிந்துவிடும் நிலைதான் இருக்கிறது என்றும், அதாவது அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் தீர்மான குழு கூட்டத்திலேயே கட்சித் தொண்டர்கள் ரத்தம் வரும் அளவிற்கு அடித்துக்கொண்டதும், இதுவே பொதுக்குழுவில் சண்டை வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்கிற ஒரு தகவலும் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, இரு தரப்பில் யாருக்கு ஆதரவான சூழ்நிலை இருந்தாலும், அதற்கு எதிராக இன்னொரு தரப்பினர் மோதல் போக்கை கையில் எடுத்து, அந்த கூட்டத்தை கலைக்க பார்ப்பார்கள் என்றும், இதனால் இரு பக்கமும் அடிதடி செய்ய தொண்டர் பலம் ரெடியாகவே இருக்கிறது என்றும், இதனால் பொதுக்குழு கூட்டம் நடப்பதும் அல்லது முழுதாக நடப்பதும் சந்தேகமாகவே உள்ளது” என்றும், அதிமுகவினரே வெளிப்படையாகவே பேசத் தொடங்கி உள்ளனர்.

இது குறித்து, அதிமுக சார்பில் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் ஒன்றும், முறைப்படி அளிக்கப்பட்டு உள்ளது என்றும், அதில் “பொதுக்குழுவில் கலவரம் நடக்க வாய்ப்பு உள்ளதாக” அதிமுக வழக்கறிஞர் அணி புகார் அளித்து இருக்கிறது.

மிக முக்கியமாக, அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சுமார் ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்றும், இதில் குண்டர்களும் ஊடுருவ அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும், அதிமுகவில் நிலவும் இந்த மோதலை பயன்படுத்தி அந்த குண்டர்கள் கூட்டத்தில் புகுந்து பெரும் கலவரத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும், இதனால் மிகப் பெரிய அளவுக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்படலாம்” என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக, “அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றும், இல்லை என்றால் அந்த கூட்டத்தை அப்படியே முழுமையாக தடை செய்ய வேண்டும்” என்றும், டிஜிபி சைலேந்திர பாபுவிடம் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

“அதிமுக பொதுக்குழுவில் கலவரம் வெடித்தால், அந்த அந்த கூட்ட அரங்கில் மட்டும் இருக்காது என்றும், அந்த திருமண மண்டபத்தை தாண்டி  வெளியேவும் பரவும் அபாயம் உள்ளதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், தமிழக அரசியலில் ஒரு அசாதாரமான சூழல் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.