தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர்.சி.  தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சுந்தர்.சி  மாஸ், கமர்ஷியல், மசாலா, காமெடி, ஹாரர் என பல ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களை கொடுத்து அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்வித்து வருகிறார்.

மேலும் நடிகராகவும் அடுத்தடுத்து நடித்து வரும் சுந்தர்.சி தலைநகரம் 2, இயக்குனர் மணி செய்யோன் இயக்கத்தில் புதிய படம், ஒன் 2 ஒன் மற்றும் இயக்குனர் பத்ரி இயக்கத்தில் நடிகர் ஜெய் உடன் இணைந்து  பட்டாம்பூச்சி ஆகியதிரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.  முன்னதாக சுந்தர்.சி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அரண்மனை 3 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இயக்குனராக அடுத்த படத்தை  தொடங்கியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கலகலப்பு திரைப்படத்தின் தொடர்ச்சியாக கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் ஜீவா மற்றும் நடிகர் ஜெய் இணைந்து நடிக்க கலகலப்பு 2 திரைப்படம் வெளியானது. இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குனர் சுந்தர்.சி, ஜீவா மற்றும் ஜெய் கூட்டணி மீண்டும்  புதிய படத்தில் இணைந்து உள்ளது.

இயக்குனர் சுந்தர்.சி மற்றும் நடிகை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில், உருவாகும் இந்த புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் மாளவிகா ஷர்மா "பிகில்" அமிர்தா பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இத்திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.