“நடிகர் விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை” என்று, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் நேற்று முன் தினம் கொரோனா ஊசி செலுத்திக்கொண்டார். இதனையடுத்து, மறுநாள் காலையில் வீட்டில் இருந்த விவேக்கிற்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டு, வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு இதய செயல்பாடு குறைந்த நிலையில், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க, அவருக்கு எக்மோ கருவி பொருத்தி இன்னும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனால், விவேக் பாதிக்கப்பட்டதற்கு, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது தான் காரணம் என்று எதிர்மறையான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

இதனால், பதறிப்போன தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து, “நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல” என்று, விளக்கம் அளித்தார்.

இப்படியான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், “நடிகர் விவேக் இறப்புக்கும் முதல் நாள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விசயம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. 

இந்ந நிலையில், “ நடிகர் விவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறி உள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், “சென்னை உள்ள 15 மண்டலங்களில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் சோதனைகள் செய்யப்படுகிறது என்றும், இதனை 25 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்” குறிப்பிட்டார்.

“சென்னை முழுவதும் 12 மையங்களில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பிரித்து அனுப்பப்படுவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறையும்” என்றும், கூறினார்.

குறிப்பாக, “நடிகர் விவேக் இறப்பு பெரிய பேரிழப்பாக நான் கருதுகிறேன்” என்று குறிப்பிட்ட அவர், “விவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று, விளக்கம் அளித்தார்.

அத்துடன், “12 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்றும், 45 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சம் பேர் உள்ளனர் என்றும், அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்” என்றும், அவர் கூறினார். 

“இப்படியாக, கொரோனாவுக்காக மட்டும் இருபதாயிரம் பேர் தினமும் வேலை செய்து வருகிறோம்” என்றும், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்தார்.

அதே போல், “அரசின் மீதும், தடுப்பூசி மீதும் நம்பிக்கை அவசியம் வேண்டும்” என்று,  சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், “நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதை வேறு விதமாக இணைக்கக்கூடாது”  என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கேட்டுக்கொண்டு உள்ளார்.