தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.  

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். அவருக்கு வயது 59. மருத்துவமனையிலிருந்து அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தினர். 

இதனிடையே நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடம் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 78 குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட உள்ளது. 

இந்நிலையில் தற்போது அவரின் குடும்ப முறைப்படி நடக்க உள்ள சடங்குகளுக்காக பொது மக்கள் அஞ்சலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விவேக் உடல் சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மயானத்தில் மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.