பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், கூட்டணி குறித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இன்று ஒரு நாள் அரசு முறை பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை வந்திருக்கிறார். 

டெல்லியில் இருந்து இன்று காலை காலை 7.50 மணியளவில், தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, காலை 10.35 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்தார். அங்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, காலை 11 மணி அளவில் சென்னை நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் பறந்து வந்த பிரதமர் மோடியை ஆளுநர், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவேற்றனர்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்குச் சாலை மார்க்கமாகப் பிரதமர் மோடி வருகை தந்தார். அவரை வரவேற்று அதிமுக, பாஜக சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

அதன் தொடர்ச்சியாக, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், தமிழ் தாய் வாழ்த்துடன் அரசு விழா முறைப்படி தொடங்கியது. விழா மேடையில் பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த முதலமைச்சர் பழனிசாமி, அவருக்கு கிருஷ்ணர் சிலையை நினைவு பரிசாக அளித்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயல‌லிதாவின் உருவ படங்களுக்குப் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.  

குறிப்பாக, பிரதமர் மோடி ராணுவத்திற்கு அர்ஜூன் மார்க் 1ஏ டாங்கியை அர்ப்பணித்து உள்ளார். 

விழா முடிவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர்களின் கைகளை உயர்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதன் பிறகு, நேரு விளையாட்டரங்கில் தமிழக முதலமைச்சர் பழனிசாமியை, பிரதமர் மோடி தனியாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பானது சுமார் 10 நிமிடங்கள் நீடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையின் போது துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உடன் இல்லை. இதனால், அதிமுக - பாஜக கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவை குறித்து இருவரும் ஆலோசனை செய்து இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.